தூத்துக்குடி மழைவெள்ளம்: அதிகாரிகளுடன் மத்திய ஆய்வு குழுவினர் ஆலோசனை
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் மத்திய குழுவினரின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய ஆய்வு குழுவை சேர்ந்த கே.பி. சிங், ரங்கநாத் ஆதம், தங்கமணி, டாக்டர் பொன்னுச்சாமி, ராஜேஷ் திவாரி, பாலாஜி, விஜயகுமார் ஆகிய 7 பேர் கொண்ட குழு மற்றும் தமிழக கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர், வருவாய் நிர்வாக கூடுதல் கமிஷனர் பிரகாஷ், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின்போது மத்திய ஆய்வு குழுவினர் பேசுகையில், தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய வருகை தந்துள்ளோம். தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு செல்ல உள்ளோம். இதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், பெருஞ்சாணி, மணிமுத்தாறு உள்ளிட்ட அனைத்து அணை கட்டுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.வெள்ளம் மற்றும் மழையின் காரணமாக விவசாய நிலங்கள், சாலைகள், மக்கள் வசிப்பிட பகுதிகள் எந்த அளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்ய உள்ளோம் என்று கூறினர்.
ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து ஆய்வு குழுவினர் குழுக்களாக பிரிந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனை மற்றும் கோரம்பள்ளம் குளம், நெல்லை-தூத்துக்குடி சாலையில் உடைப்பு ஏற்பட்ட பகுதி உட்பட பல்வேறு பகுதிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.







