சுயசரிதை எழுதும் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழும் ரஜினிகாந்தின் வாழ்க்கைப் பயணம், பலருக்கும் உத்வேகத்தை அளிக்கும் ஒன்றாகும். கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகத்தில் பஸ் கண்டக்டராக பணியாற்றிய அவர், தனது விடாமுயற்சி மற்றும் திறமையால் தமிழ் சினிமாவின் “சூப்பர் ஸ்டார்” என்ற உயரத்தை அடைந்தார்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்ட சுயசரிதை புத்தகத்தை எழுதி வருவதாக தகவல்கள் வெளியாகியது. சிறுவயது முதல் சினிமாவில் உச்சம் தொட்டது வரை நடந்த முக்கிய சம்பவங்கள், வாழ்க்கைப் போராட்டங்கள் மற்றும் அனுபவங்கள் இந்த புத்தகத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுயசரிதை புத்தகம் மட்டுமின்றி, அதை திரைப்படமாக உருவாக்குவது குறித்தும் ரஜினிகாந்த் தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் நம்பிக்கைக்குரியவர்களுடன் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றாலும், இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ரஜினிகாந்த் தனது சுயசரிதையை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவரது மகளும், இயக்குநருமான சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

திரையுலகில் ரஜினிகாந்த் சந்தித்த தொடக்க கால போராட்டங்கள், அவரது வளர்ச்சி, முக்கியமான திரைப்படங்கள், திரையுலக அனுபவங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அவரது சுயசரிதையில் இடம்பெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.







