கோவையில் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் அமுதன் (வயது 19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி அவர் சகமாணவர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.இந்த கொலையில் தொடர்புடைய கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த 4-ம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஆரமுதன் (20), சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த அரவிந்த் (21), தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலம் சிவா ரோகித் (20), பெரம்பலூர் மாவட்டம் குன்னம்பகுதியை சேர்ந்த மணி பாலு (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட வழக்கில், சந்தோஷ் என்ற மேலும் ஒரு மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
கல்லூரி விடுதியில் தங்கி படித்து வரும் மாணவர் அமுதன், அடிக்கடி வெளியே சென்று தனது நண்பர்கள் அறையில் தங்குவது வழக்கம். கடந்த 9-ந் தேதி காலையில் அமுதன் உள்பட 9 மாணவர்கள், விடுதியில் 4-ம் ஆண்டு மாணவர்கள் தங்கி இருக்கும் அறைக்கு முகமூடி அணிந்து சென்று செல்போன்களை பறித்ததாக கூறப்படுகிறது.
இந்த செல்போன் திருட்டு தொடர்பாக, 9 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். செல்போன் பறிப்பு சம்பவத்தில் அமுதனை அடையாளம் கண்டுபிடித்த மாணவர்கள், அவரை சரமாரியாக தாக்கியதில் அவர் உயிரிழந்து உள்ளார்.
ஆனால் போதைப்பொருட்கள் தொடர்பாக புகார் செய்ததால்தான், அமுதனை சக மாணவர்கள் அடித்து கொன்றதாக தகவல் பரவி வருகிறது. இந்த கொலைக்கு போதைப்பொருள் காரணம் இல்லை. மாணவர்களை தாக்கி, செல்போனை பறித்து சென்றதால்தான் கொலை நடந்து உள்ளது.
இதில் 20 மாணவர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்து உள்ளது. அதில் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் 7 மாணவர்களை அடையாளம் கண்டு உள்ளோம். அவர்களை தீவிரமாக தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த கொலை தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கு தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.ஆனால் போதைப்பொருள் தொடர்பாக செட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்ததாகவும், அதை அறிந்த 4-ம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவர்கள் அவரை சரமாரியாக தாக்கி கொலை செய்ததாகவும் தகவல் பரவி வருகிறது.அமுதனின் பெற்றோரும் இதே கருத்தைதான் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில் அமுதனின் பெற்றோர் தெரிவித்ததில் எவ்வித உண்மையும் இல்லை. அமுதன் எந்த போலீஸ் நிலையத்திலும் புகார் செய்யவில்லை. அது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தவும் இல்லை என்றனர்.







