சிகரெட் லைட்டர் பிரச்சினை: முதலமைச்சர் விஜய் யை சந்தித்து முறையிட தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் முடிவு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் விஜய் ஆனந்த் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
தீப்பெட்டி தொழில் லைட்டர் வரவால் ரொம்ப பாதிப்படைந்து வருகிறது. தீப்பெட்டி தொழில் ஆரம்பித்து நூற்றாண்டுகள் ஆகிவிட்டது. 1923ல் தீப்பெட்டி தொழில் சிவகாசியில் தொடங்கப்பட்டு இன்றைக்கு தென் தமிழ்நாடு, குடியாத்தம், காவேரிப்பட்டினம் என ஐந்து மாவட்டங்களிலும் பிரதான தொழிலாக உள்ளது. இதில் பெண் தொழிலாளர்களே 80 சதவீதம் வேலை பார்க்கின்றார்கள்.

ஏறத்தாழ 100 ஆண்டுகளை கடந்து வளர்ந்து இன்றைக்கும் உற்பத்தியில் இருந்து வருவது தீப்பெட்டி தொழில். அத்தகைய தீப்பெட்டி தொழிலுக்கு பெரும் சவாலாக இருந்து வருவது ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் லைட்டர். இது மெஜாரிட்டியாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
மத்திய அரசு ரூபாய் 20 க்கு கீழ் உள்ள லைட்டரை முதலில் தடை செய்திருந்தார்கள். அதற்கு அப்புறம் இந்தியாவிலேயே ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் லைட்டர் உற்பத்தி ஆரம்பித்ததும், அந்த பொருளின் விலையும் குறைந்து தரமும் குறைந்து விட்டது. பாதுகாப்பிலும் நம்பகத்தன்மை இல்லாத நிலை. மேலும் அவை மக்கும் பொருளாக இல்லாத காரணத்தால் சுற்றுச்சூழல் விஷயத்திலும் இயற்கைக்கு எதிரான நிலை உள்ளது.
தீப்பெட்டி தொழிலுக்கு பெரும் சவாலாக இருந்து வருவது இந்த ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் லைட்டர் தான். இதனால் யாருக்கும் எந்த வேலை வாய்ப்பும் கிடையாது. மேலும் லைட்டர்கள் இறக்குமதி ஆவதால் நாட்டுக்கு ஜிஎஸ்டி வரியும் கிடைக்கவில்லை. அந்நிய செலாவணியும் கிடைக்கவில்லை. ஆனால் தீப்பெட்டி ஏற்றுமதி 400 கோடி ரூபாய் வரைக்கும் ஆகிறது. இந்த ஏற்றுமதி 600 கோடி ரூபாய் ஆவதற்கும் இப்போது வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. ஆனால் தீப்பெட்டி தொழிலுக்கு பாதிப்பு வருவதனால் தான் தீப்பெட்டி தொழில் முன்னேற்றம் அடைய முடியாமல் உள்ளது.
எனவே ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் லைட்டரின் உற்பத்தி, விற்பனை, பயன்பாடு ஆகிய மூன்றையும் தமிழ்நாட்டில் தடை செய்ய வலியுறுத்தியும், தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க கோரியும் முறையிட தமிழக முதல்வர் ஜோசப் விஜயை நேரில் சந்திக்க நாங்கள் முடிவு எடுத்திருக்கிறோம்.
தீப்பெட்டி தொழிலை பாதுகாப்பதற்கு தமிழ்நாடு அரசு தீவிர முயற்சியும் நடவடிக்கையும் எடுத்தால் இந்த தொழில் மேலும் சிறப்பாக இருக்கும். உற்பத்தியும் பன்மடங்கு பெருகும். தீப்பெட்டி தொழிலை பாதுகாத்திடவும் வேலை வாய்ப்பை பாதுகாத்திடவும் அரசின் உதவியை பெரிதும் வேண்டுகிறோம்.
இவ்வாறு கூறியபோது செய்தியாளர்கள் குறுக்கிட்டு ஏற்கனவே இது தொடர்பாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் மனு கொடுத்தது குறித்து கேள்வி எழுப்பினர்.அதற்கு பதில் அளித்து விஜய் ஆனந்த் கூறியதாவது :-
“மினிமம் வேல்யூசன் பிரைஸ் என குறிப்பிட்டு 20 ரூபாய்க்கு கீழ் உள்ள லைட்டரை தடை செய்தார்கள். ஆனால் அதற்கு மேல் அசஸ்மென்ட் வேல்யூ போட்டு எந்த லைட்டர் கொண்டு வந்தாலும் வரி செலுத்தி கொண்டு வருகிற சூழ்நிலை இருந்தது. அதை தொடர்ந்து லைட்டர் உதிரி பாகங்களும் வர ஆரம்பித்து விட்டது.
நாங்கள் மீண்டும் ஒரு முறை அரசிடம் முறையிட்டு லைட்டர் உதிரி பாகங்கள் இறக்குமதி செய்ய தடை செய்ய சொல்லி கேட்டிருந்தோம். அதையும் மத்திய அரசு செய்து கொடுத்தார்கள்.
ஆனால் ஒரு லைட்டரில் 7 விதமான உதிரிபாகங்கள் இருக்கிறது. அவை பிளாஸ்டிக் பொருட்களாக இருப்பதனால் லைட்டர் சம்பந்தப்பட்ட உதிரிபாகங்கள் என தெரியாமலேயே சீனாவில் இருந்து இந்தியாவுக்குள் இறக்குமதி ஆகிவிடுகிறது.
அப்படி வரும்போது அந்த உதிரிபாகங்களை இங்கு இணைத்து ஒன்று சேர்க்கும் போது மலிவாகவும் ஆகி விடுகிறது. அதன் தரமும் நம்பகத்தன்மை இல்லாமல் விற்பனைக்கு வந்து விடுகிறது. பாதுகாப்பு அம்சங்களும் உறுதியில்லாமல் இருக்கிறது.
அதனால் தான் லைட்டரையே ஒட்டுமொத்தமாக தடை செய்ய வேண்டும் என்கிறோம். அப்படி தடை செய்தால் மட்டும் தான் இந்த மண்ணில் நம்முடைய வாழ்வாதார தொழிலாக உள்ள தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க முடியும். இதுதான் எங்களுடைய பிரதான கோரிக்கை. மேலும், அந்தமான் நிக்கோபார் தீவில் சுற்றுச்சூழலுக்கு கேடு என்ற பெயரில் பல வருடங்களுக்கு முன்பே அங்கு தடை போட்டு விட்டார்கள்.
சுற்றுலா செல்கிறவர்கள் லைட்டர் கொண்டு போகிறார்கள் என்பதால் தடை பண்ணிட்டாங்க. அந்த தடை உத்தரவை நாங்கள் எல்லா மாநில அரசுக்கும் அனுப்பி இருக்கிறோம். மத்திய அரசுக்கும் கொடுத்து இருக்கிறோம்.

ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் லைட்டர் இல்லாமல் ஒரு மெட்டல் லைட்டர் ஆக இருந்தால் அதன் விலை 50 ரூபாய்க்கு மேல் போய் விடும். அந்த பொருள் தீப்பெட்டிக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ போட்டியில் இல்லை. ஆனால் 10 ரூபாய்க்கு கீழே உள்ள லைட்டரும், 10 ரூபாய் உள்ள லைட்டரும் தான் தீப்பெட்டி தொழிலுக்கு பெரிய சவாலாக உள்ளது.
இவ்வாறு விஜய் ஆனந்த் கூறினார்.
பேட்டியின் போது தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் வரதராஜன், பொருளாளர் என்.ராஜவேல், துணைத்தலைவர் அம்புரோஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.







