விதிமீறல்களை கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்கள் தூத்துக்குடி வருகை
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பணிகள் மற்றும் வேட்பாளர்களின் செலவினங்களைக் கண்காணிப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தின் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தனித்தனியே பொது, செலவினம் மற்றும் காவல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தின் பொதுப் பார்வையாளர்களாக 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, எலுச்சூரி ரத்னாகர ராவ் (73972 52344) விளாத்திகுளம் மற்றும் தூத்துக்குடி தொகுதிகளையும், சோடிங்புயீ (73050 82344) திருச்செந்தூர் மற்றும் திருவைகுண்டம் தொகுதிகளையும் கண்காணிப்பார்கள். ஓட்டப்பிடாரம் (தனி) மற்றும் கோவில்பட்டி ஆகிய தொகுதிகளுக்கு அர்விந்த் குமார் வர்மா (72007 52344) பொதுப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செலவினப் பார்வையாளர்கள்: வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்க 4 ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓட்டப்பிடாரம் மற்றும் கோவில்பட்டி தொகுதிகளுக்கு அனூப் குமார் ஜெயின் (73973 52344), விளாத்திகுளம் தொகுதிக்கு ஷிவ் பிரசாத் பால்,(97904 50340) பொறுப்பேற்றுள்ளனர். தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் தொகுதிகளை நக்குல் அகர்வால், (97904 50087), திருவைகுண்டம் தொகுதியை சன்னி கச்வாஹா (97904 50376) ஆகியோர் கண்காணிப்பார்கள்.

காவல் பார்வையாளர் மற்றும் புகார் அளிக்கும் முறை: மாவட்டம் முழுவதும் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடத்தை முறைகளைக் கண்காணிக்க ஹிர்மத் சுதிர் கல்யா, I.P.S. (73389 72344) காவல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக மேற்கண்ட பார்வையாளர்களின் எண்களுக்கோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் 1800-599-1960 என்ற கட்டணமில்லா எண்ணிற்கோ புகார் அளிக்கலாம். மேலும், 94864 54714 என்ற வாட்ஸ்அப் எண் மற்றும் C-Vigil செயலி வழியாகவும் புகார்களைத் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி வந்த தேர்தல் பார்வையாளர்கள் இன்று அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி ஆலோசனிகள் வழங்கினார்கள். இக்கூட்டத்தில் ஆட்சியர் இலம்பக்வத், போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் மதன் ஆகியோரும் பங்கேற்றனர்.







