முதியோர், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு; தூத்துக்குடி கலெக்டர் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்திற்கு மேல் பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்துவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்தே வாக்களிக்க விரும்பும் தகுதியுள்ள நபர்களுக்கு, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலம் அவர்களின் வீடுகளுக்கே சென்று படிவம் 12D வழங்கப்படும்.
தேர்தல் அறிவிப்பு வெளியான 5 நாட்களுக்குள் இந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இந்த படிவத்தை மாவட்ட இணையதளமான www.thoothukudi.nic.in என்ற தளத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தபால் வாக்கு அளிக்க விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கே தேர்தல் அலுவலர்கள் நேரடியாகச் சென்று, வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாகவே வாக்குகளைப் பெற்றுக்கொள்வர்.

ராணுவம், காவல்துறை மற்றும் இதர அத்தியாவசியத் துறைகளில் பணியாற்றுவோருக்கு மட்டும் குறிப்பிட்ட மையங்களில் மூன்று நாட்கள் தபால் வாக்கு செலுத்த வசதி செய்யப்படும்.
வாக்குச்சாவடிக்கு வர இயலாத மூத்த குடிமக்களும், மாற்றுத்திறனாளிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது ஜனநாயகக் கடமையை 100 சதவீதம் நிறைவேற்ற வேண்டும். இது குறித்த தகவல்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு குறுஞ்செய்தி (SMS) மூலமாகவும் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.







