• March 18, 2026

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள்

 திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள்

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் இன்று (மார்ச் 18) கையெழுத்தானது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இறுதி கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், முன்னாள் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் ஆகியோர் முன்னிலையில் இந்த தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. 

4 கட்டங்களாக நடைபெற்ற விரிவான பேச்சுவார்த்தைக்குப் பின் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, இந்த முறை ஒரு இடம் குறைக்கப்பட்டு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

200 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற இலக்குடன் களம் இறங்கியுள்ள திமுக, தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை தீவிரப்படுத்தியுள்ளது. 

திமுக கூட்டணியில் மொத்தம் 21 கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், இதுவரை 6 கட்சிகளுக்கு மொத்தம் 43 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மய்யம் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பிற தோழமைக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் விரைவில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *