மாணவி கொலை வழக்கில் 5 பேரிடம் டிஎன்ஏ சோதனை; மதுரை ஐகோர்ட்டில் போலீஸ் தகவல்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, கடந்த 10-ம் தேதி இரவு இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டார். மறுநாள் காலை அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை உடலைப் பெற மாட்டோம் என உறவினர்கள் 5-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மாணவிக்கு நன்கு தெரிந்த நபரே இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். மாணவியின் வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவிலேயே உடல் மீட்கப்பட்டது. தற்போது சந்தேகப்படும் 5 நபர்களின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று விளக்கமளித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தனர். நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில்: அறிவியல் ரீதியான விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும். மாணவியைக் காணவில்லை என்று பெற்றோர் புகார் அளித்தபோதே காவல்துறை முறையாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த விபரீதம் நிகழ்ந்திருக்காது.

புகாரை அலட்சியப்படுத்திய காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், என்று அதிரடியாக உத்தரவிட்டனர். தற்போது மாவட்ட எஸ்பி மதன் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கிராமம் கிராமமாக வீடு வீடாகச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.







