வேடநத்தம் மாணவி கொலை வழக்கை சி. பி. ஐ. க்கு மாற்ற அதிமுக கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட வேடநத்தம் கிராமத்தில் 12ம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை கொலை செய்யப்பட்டு 4 நாட்கள் ஆகியும் குற்றவாளியை கைது செய்யாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
எனவே இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உண்மையான குற்றவாளிகள் உடனடியாக பிடிபட வாய்ப்புள்ளது என முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் தெரிவித்தார்.

இதுகுறித்துசி.த.செல்லப்பாண்டியன் பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூறியதாவது: –
12ம் வகுப்பு பள்ளி மாணவி காணவில்லை என விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்த போது, உடனயாக நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகவும், அவதூறாகவும் பேசியதாக புகார் எழுந்துள்ளது.
காவல்துறை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் தான் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் தார்மீக பொறுப்பேற்று உடனடியாக முதல்வர் பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும்.

கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவியின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் உடனடியாக அறிவிக்க வேண்டும். குற்றவாளிக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தெரிவித்தார்.







