தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; டாக்டர் கிருஷ்ணசாமி
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :-
ஜனவரி 7-ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற கட்சியின் பிரமாண்ட மாநாட்டு தீர்மானங்கள் கிராமங்கள் தோறும் கொண்டு செல்லப்படும். தொடர்ந்து தென்காசி, சங்கரன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 11-ஆம் தேதி வரை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

தற்போதைய அரசியல் சூழலில் கூட்டணி என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதற்கான பேச்சுவார்த்தைகள் வலுவாக நடைபெற்று வருகின்றன. வரும் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி சட்டமன்றத்திலும், ஆட்சி அதிகாரத்திலும் அங்கமாக இருக்கும்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் உட்பட 5 தமிழர்கள் ஆப்பிரிக்காவின் மாலி நாட்டில் வேலைக்குச் சென்று, தற்போது தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. அவர்களை உடனடியாக மீட்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தூதரக ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் கனிமவளக் கொள்ளை தொடர்கதையாக நடக்கிறது. வல்லநாடு விஏஓ படுகொலை மற்றும் கனிமவளக் கொள்ளையைத் தடுத்த அதிகாரிகள், செய்தியாளர்கள் மீதான தாக்குதல்கள் கடும் கண்டனத்திற்குரியது.
குவாரி உரிமையாளராக உள்ள ஆளுங்கட்சி எம்.எல்.ஏ பழனி மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஊடகவியலாளர்கள் மீதான கொலைவெறித் தாக்குதலை ஒவ்வொரு செய்தியாளரும் தங்களுக்கு நேர்ந்ததாகக் கருதி குரல் கொடுக்க வேண்டும்.

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆனால் அது இயந்திரத்தனமான மாற்றமாக இருக்கக்கூடாது. மதுக் கொடுமை இல்லாத, கனிமவளக் கொள்ளை இல்லாத, அரசு வேலைகளில் ஊழலற்ற நேர்மையான நிர்வாகமே எங்களது கொள்கை,”
100 நாள் வேலைத் திட்டத்திற்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்து ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.







