பணியிடமாற்றம் செய்யப்பட்ட சப் – இன்ஸ்பெக்டர்கள் மீண்டும் பழைய இடத்துக்கே மாறுதலா?தூத்துக்குடி மாவட்ட காவல்துறைஅறிக்கை
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே காவல் நிலையத்திலும் மற்றும் சொந்த இருப்பிட எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திலும் பணிபுரிந்து வரும் காவல்துறையினருக்கு பணியிட மாறுதல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பரீசிலனை செய்யப்பட்டதில் 419 காவல்துறையினர் பணியிட மாற்றத்திற்கு உட்பட்டனர்.
இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவல்துறையினருக்கு பணியிட மாறுதல் வழங்கும் பொருட்டு அவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் தலைமையில் அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களுடன் பணியிட மாற்ற குழு அமைக்கப்பட்டு பணியிடமாறுதல் வழங்கப்பட்டது.
எனவே தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்ட சில எஸ்.எஸ்.ஐ க்கள் ஏட்டுகள் மற்றும் போலீசார் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் பணிபுரிந்த பழைய இடத்திற்கே மாறுதலாகி வந்துள்ளனர். இது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது”
என நாளிதழ் செய்தி வெளியிட்டதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துக் கொள்கிறது.
அத்துடன் காவல்துறையினரின் சொந்த விருப்ப மனுக்களின் அடிப்படையிலும் காலியாக உள்ள இடங்களின் அடிப்படையிலும் மட்டுமே பரிசீலனை செய்யப்பட்டு பணியிடமாறுதல் வழங்கப்பட்டது என இதன் மூலம் விளக்கம் அளிக்கிறது.

மேலும் மாவட்ட காவல் அலுவலக நிர்வாகத்தின் மூலம் காவல்துறையினருக்கு செயல்படுத்தப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளில் அதன் உண்மை தன்மை தெரியாமல் யாரும் எந்த விதமான தவறான தகவல்களை செய்தி நாளிதழ் மற்றும் சமூக ஊடகத்தில் வெளியிட வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற தவறான தகவல்களை வெளியிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







