`பராசக்தி’ வெளியானது; படத்தை ரசிகர்களுடன் கண்டுகளிக்கும் பிரபலங்கள்
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு மத்திய திரைப்படத் தணிக்கை குழு 25 மாற்றங்களைச் செய்ய உத்தரவிட்டு, U/A 16+ சான்றிதழ் வழங்கியுள்ளது.
அதன்படி, ‘தீ பரவட்டும்’ என்ற காட்சி ‘நீதி பரவட்டும்’ எனவும், ‘இந்தி அரக்கி’ என்ற வசனம் ‘அரக்கி’ எனவும் மாற்றப்பட்டுள்ளது. மேலும், ‘இந்தி என் கனவை அழித்தது’ என்ற வசனம் ‘என் ஒரே கனவை இந்தி திணிப்பு எரித்தது’ என திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, திரைப்படத்திற்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக தொடங்கியது. தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘பராசக்தி’ திரைப்படம் வெளியாகி வருகிறது. இதனால், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்த நிலையில், தற்போது ‘பராசக்தி’ திரைப்படத்தின் ஸ்பெஷல் ஷோக்கள் தொடங்கியுள்ளன. ரசிகர்கள் ஆவலுடன் திரையரங்குகளுக்கு வந்து படத்தை கண்டு ரசித்து வருகின்றனர்,

இந்த நிலையில், பராசக்தி படத்தின் ஸ்பெஷல் ஷோவை ரசிகர்களுடன் கண்டுகளிக்க பிரபலங்கள் தியேட்டர்களுக்கு வருவை தந்துள்ளனர். அந்தவகையில், நடிகை ஸ்ரீலீலா, நடிகை ஷாலினி அஜித்குமார் மற்றும் நடிகர் துருவ் விக்ரம் ஆகியோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் தியேட்டருக்கு சென்றுள்ளார். மேலும் ரவிமோகன், பாடகி கெனிஷா ஆகியோர் காசி தியேட்டருக்கும் படம் பார்க்க சென்றுள்ளார். அவர்களை ரசிகர்கள் தியேட்டர்களில் உற்சாகமாக வரவேற்றனர்.







