கொலை வழக்கில் 3 பேருக்கு மூன்று ஆயுள் தண்டனை; ஒருவருக்கு இரட்டை ஆயுள் -இன்னொருவருக்கு 5ஆண்டு சிறை
ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 குற்றவாளிகளில் 3 பேருக்கு தலா மூன்று ஆயுள்தண்டனை, ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி சிவில் உரிமை பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இது பற்றிய விவரம் வருமாறு:-
கடந்த 2012ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் வெல்லூர் பகுதியைச் சேர்ந்த கடற்கரையாண்டி மகன் ஆறுமுகராஜா (43/2025).

அதே பகுதியைச் சேர்ந்த காசி (42/2025), இசக்கிமுத்து (36/2025), கண்ணன் என்ற கண்ணபெருமாள் (45/2025), தளவாய் (45/2025), சிவா என்ற சிவலிங்கம் (34/2025) மற்றும் துரைமுத்து ஆகியோர் வீடு புகுந்து சாதிப்பெயரை சொல்லி அரிவாளால் தாக்கமுயன்றும் அவரது தாயாருக்கு கொலை மிரட்டலும் விடுத்த வழக்கில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் வழக்கு பதிவு செய்து அப்போதைய துணை கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு மேற்படி ஆறுமுகராஜா ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நின்று கொண்டிருந்த போது மேற்படி எதிரிகளில் கண்ணனை தவிர மற்றவர்கள் ஒன்று சேர்ந்து மீண்டும் ஆறுமுகராஜாவிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் தாக்கி கொலை செய்தனர்.
இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேற்படி 2 வழக்குகளின் விசாரணை தூத்துக்குடி சிவில் உரிமை பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வர்கிஸ்குமார் புதன்கிழமை தீர்ப்பு வழங்கினார். குற்றவாளிகளில் துரைமுத்து உயிரிழந்த நிலையில் மற்ற எதிரிகளான இசக்கிமுத்து, தளவாய், சிவா என்ற சிவராமலிங்கம் ஆகிய 3 பேருக்கு தலா மூன்று ஆயுள்தண்டனை, தலா ரூபாய் 13,000/- அபராதமும், காசி என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை ரூபாய் 7,000/- அபராதம், கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட கண்ணன் என்பவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூபாய் 12,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார், மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் மோகன்தாஸ் , விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் சந்திரா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார். இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 30 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.







