அன்புமணி மீதான ஊழல் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்; ராமதாஸ் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பாமகவின் நிர்வாகக்குழு கூட்டம் விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது.
நிலுவையில் உள்ள அன்புமணி மீதான ஊழல் வழக்கை சிபிஐ விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்,மானம் நிறைவேற்றப்பட்டது,
மேலும் சின்னம், தலைவர் தொடர்பான விவகாரங்களில் அன்புமணி செய்த மோசடி வேலைகளையும் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கி விட்டேன். அப்போது என் பெயரையும் கட்சியின் பெயரையும் பயன்படுத்தக்கூடாது என தெரிவித்திருதேன். இருப்பினும் எனது பெயரையும் கட்சியின் பெயரையும் பயன்படுத்தி இருக்கிறார்கள் இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.
இப்போது அன்புமணிக்கு சின்னமும் இல்லை கட்சியும் இல்லை என நாங்கள் வழக்கு தொடுத்தோம். அன்புமணி கட்சி உறுப்பினர் கூட இல்லை. அவரை நாங்கள் நீக்கி விட்டோம். கட்சியைக் கைப்பற்ற பம்மாத்து வேலைகளை எல்லாம் அன்புமணி தொடர்ந்து செய்து வருகிறார். தீட்டிய மரத்திலேயே கூர் பாய்ச்சியதைப் போல் பாமக என்னும் மரத்தில் கிளையை வெட்ட ஆரம்பித்திருக்கிறார் அன்புமணி.

நாம் நட்ட ஒரு பூந்தோட்டம். அதில் பல குரங்குகள் நுழைந்து பூக்களை எல்லாம் தினமும் நாசம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தேர்தல் ஆணயம், டெல்லி அனைத்தும் சொல்லியும் மூட கூட்டம் நடத்துவது, இது போன்ற பம்மாத்து வேலைகளை எல்லம் செய்து வருவது தமிழக அரசியலில் இதுவரை நடைபெறாத ஒரு கொடுமை. இதற்கு முன்னர் இப்படி எல்லாம் நடந்ததில்லை.

அன்புமணி என் பெயரை சொல்லி என் பணத்தை போட்டு என் கொடியை பயன்படுத்தி செய்வது வேதனை அளிக்கிறது. இதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்த நிர்வாகக்குழுவில் கண்டிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பொய் மூட்டைகளை ஊடகங்களுக்கு அன்புமணி கொடுக்கிறார். அது எனக்கு வருத்தம் அளிக்கிறது.
இவ்வாறு ராமதாஸ் கூறினார்.







