கோவில்பட்டி அருகே போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலைகள்; பொதுமக்கள் கடும் அவதி
மாநில அரசின் நெடுஞ்சாலை துறையில் மாநில நெடுஞ்சாலை, மாவட்ட இதர சாலை, ஊரக வளர்ச்சி துறையில் முதல்வரின் கிராம சாலைகள், வட்டார ஊராட்சி சாலை, பிரதம மந்திரி கிராம சாலை, மற்றும் மத்திய தேசிய நெடுஞ்சாலை என பல்வேறு வகையான சாலைகள் உள்ளன.
இச்சாலைகள் மத்திய மாநில அரசுகளின் நிதியில் இருந்து பராமரிப்பு மற்றும் புதிய சாலைகள் அமைக்கின்றனர். கடந்த காலங்களில் புதிய தார்ச்சாலைகள் ரோடு ரோலர் இயந்திரம் மூலம அமைக்கப்பட்டது.

இதனால் சாலைகள் சமதளமாக இல்லாமல் மலைமுகடு போல் சாலையின் நடுவில் மேடாக இருக்கும். ஆனால் தற்போது போடப்படும் அனைத்து சாலைகளும் புதிய தொழில்நுட்ப வசதியுடன் மெஷின் மூலம் பேவர் ரோடு எனப்படும் சமதள சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆயுட்காலம் ஐந்தாண்டுகளாகும்.
இச்சாலையில் மழை நீர் தேங்காது பள்ளம் ஏற்படாது. இதனால் இது போன்ற புதிய தொழில்நுட்ப சாலை அமைக்கும் பணியை தொடர்ந்து செய்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாநில அரசு நெடுஞ்சாலைதுறையின் கட்டுப்பாட்டில் முத்துலாபுரம் – தோல் மலைப்பட்டி, கருப்பூர் – கடலையூர் சாலை , கருப்பசாமி கோவில்பட்டி – வீரப்பட்டி , மலைப்பட்டி . கோவில்பட்டி சாலையில் பல்வேறு குக்கிராமங்கள் உள்ளன.

இக்கிராம மக்கள் மேற்படி சாலைகளை பயன்படுத்தியே பள்ளிக்கும், கல்லூரிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும், விவசாயிகள் விளை பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்வதற்கும், மற்றும் பல்வேறு பணிகளுக்கும் செல்கின்றனர்.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த சாலை கடந்த 5 ஆண்டுகளாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. தவிர சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு கிணறு போல் காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியாக வாகனங்கள் செல்ல முடிய வில்லை. கர்ப்பிணி தாய்மார்கள் அவசரத்திற்கு மருத்துவமனை செல்வதற்கு வாடகை வாகனங்கள் கூட வர மறுக்கின்றனர்.
இதனால் பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அரசு பேருந்துகள் மோசமான சாலையை காரணம் காட்டி அடிக்கடி கட் அடிக்கின்றன. பொதுமக்கள் நலன் கருதி முத்துலாபுரம் – தோல்மலைப்பட்டி – கடலையூர் சாலையை சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரிசல் விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.







