இரு பஸ்கள் மோதிய விபத்தில் உயிரிழப்பு 8 ஆக உயர்வு : ஒரு பஸ்சின் உரிமம் ரத்து
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கொல்லம் – திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை 2 தனியார் பஸ்கள் சென்று கொண்டிருந்தன. காமராஜர்புரம் பகுதியில் சென்றபோது 2 பஸ்களும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், தென்காசி பஸ் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

பஸ்சில் பயணம் செய்த செங்கோட்டையை சேர்ந்த சுப்பிரமணியன் (43) என்பவர் இலத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், விபத்து ஏற்படுத்திய கெய்சார் பஸ் டிரைவர் நெற்கட்டும்செவல் பகுதியை சேர்ந்த முத்துசெல்வம் (36) மற்றும் எம்.ஆர்.ஜி. பஸ் டிரைவர் ராஜபாளையம் முத்துக்குடியை சேர்ந்த கலைசெல்வன் (40) ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விபத்தில் இவர்கள் இருவரும் படுகாயமடைந்து மருதுவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சங்கரன்கோவிலில் இருந்து தென்காசி நோக்கி சென்ற தனியார் பஸ்சில் ஏற்கனவே அதிகளவில் பயணிகள் இருந்தனர். ஆனால் தனக்கு முன்னால் சென்ற அரசு பஸ்சை வேகமாக முந்தி சென்று மேலும் பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும் என்ற முயற்சியில் போட்டிப்போட்டு அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது.

இந்த பஸ் இடைகால் அருகே அரசு பஸ்சை முந்தி செல்ல முயன்றபோதுதான் எதிரே வந்த மற்றொரு தனியார் பஸ் மீது நேருக்கு நேர் மோதிவிட்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
அதிர்ஷ்டவசமாக நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு மழை காரணமாக விடுமுறை விடப்பட்டிருந்தது. இல்லையெனில் இந்த 2 பஸ்களிலும் மாணவ, மாணவிகள் தான் அதிகளவில் பயணித்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிவேகத்தில் அரசு பஸ்சை முந்தி சென்று விபத்தை ஏற்படுத்திய கே.எஸ்.ஆர். என்ற தனியார் பஸ்சின் உரிமத்தை ரத்து செய்ய கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்,.







