கோவில்பட்டியில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வீடு புகுந்து நகைகளை திருடியவர் கைது
கோவில்பட்டி முத்து நகரை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 74). இவர் சிறப்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவியும் 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் 3 பேருக்கும் திருமணம் ஆகி சென்னையில் வசித்து வருகின்றனர்.
முனிராஜ் மனைவியுடன் கோவில்பட்டி முத்துநகர் பல்லாக்கு ரோட்டில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடந்த மாதம் முனிராஜ் வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்னையில் வசிக்கும் மகனை பார்க்க சென்றார்.

அந்த சமயத்தில் அவரது வீட்டு கதவை உடைத்து மர்மநபர் உள்ளே புகுந்து ஒரு பவுன் எடையுள்ள 2ஜோடி கம்மல், ஒரு மோதிரம் ஆகியவற்றை திருடி சென்றார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கிழக்கு போலீஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடி வந்தனர். மேலும், இத்திருட்டு சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த முருகேசன் மகன் முத்துராஜாவை (32) நேற்று தனிப்படை சப் -இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் கோவில்பட்டி பல்லாக்கு ரோட்டில் மடக்கி பிடித்தனர். அவரிடம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர்.

, ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையம் பகுதியில் வசித்து வரும் அவர், கடந்த மாதம் கோவில்பட்டி ஜோதி நகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது முனிராஜ் மனைவியுடன் சென்னை செல்வதை நோட்டமிட்டு, வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.







