• June 7, 2025

`சஷ்டியப்தபூர்த்தி’,`சதாபிசேகம்’;பசுவந்தனை கயிலாசநாத சுவாமி கோவில் சிறப்புகள்

 `சஷ்டியப்தபூர்த்தி’,`சதாபிசேகம்’;பசுவந்தனை கயிலாசநாத சுவாமி கோவில் சிறப்புகள்

கோவில்பட்டியில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள பசுவந்தனையில் அமைந்து உள்ளது கயிலாசநாத சுவாமி கோவில்.

பசுவும் தேவர்களும் வழிபட்ட இக்கோவிலில் உள்ள  இறைவனின் பெயர் கயிலாசநாதர். இறைவியின் பெயர் ஆனந்தவல்லி அம்மன். ஆலய தல விருட்சம் வில்வ மரம்.

இத்தல சிவலிங்கத்தின் மீது, பசு வந்து அணைந்து பால் சொரிந்ததால் இத்தலம் ‘பசுவந்தனை’ என்று அழைக்கப்படுகிறது.

கயிற்றாறு (தற்போது கயத்தாறு என்று அழைக்கப்படுகிறது) என்னும் பகுதியை ஆண்டு வந்த மன்னன், ஆநிரைகளை (பசுக்களை) போற்றி வந்தான்.

பசுக்கூட்டங்கள், மன்னனின் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியில் தினமும் புல் மேய்வது வழக்கம். அந்த பசுக் கூட்டத்தில் இருந்த ஒரு பசு மட்டும், அங்குள்ள ஒரு குளத்தில் நீராடி வில்வ மரத்தடியில் இருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது பாலைச் சொரிந்து விட்டு பின்னர் தனது கூட்டத்தில் புகுந்து சேர்ந்து விடும்.

அந்த பசு மாட்டில் மட்டும் பால் குறைவதை அறிந்த மன்னன், தனது காவலர்களை அனுப்பி ‘உண்மை என்ன?’ என்று கண்டறிந்து வருமாறு ஆணையிட்டான்.

மன்னனின் உத்தரவுக்கு கட்டுப்பட்ட காவலர்கள், அந்த மாட்டை கண்காணிக்க தொடங்கினர். அப்போது தான் பசு தினமும் சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்து வந்தது தெரியவந்தது.

இறையுணர்வு மிக்க தனது பசு, பால் சொரிந்த இடத்தை சென்றடைந்த மன்னன், அங்கிருந்த சிவலிங்கத்தை கண்டு பணிந்து பயபக்தியுடன் வணங்கினான்.

இரவு படையுடன் அங்கு தங்கியிருந்த மன்னன், வானவர்கள் வந்து அந்த சிவலிங்கத்தை அர்ச்சித்து வழிபாடு செய்வதைக்கண்டு மெய் உருகிப் போனான்.

பசு பால் சொரிந்து, வானவர்கள் வழிபட்ட சிவலிங்கத்திற்கு அந்த இடத்திலேயே ஆலயம் எழுப்ப முனைந்தான்.

அதன்படி அந்த இடத்தில் ஆனந்தவல்லி சமேத கயிலாசநாதருக்கு சிறியதாக ஒரு ஆலயத்தை அமைத்தான்.

அதனை சுற்றி முறைப்படி வீதிகள் அமைத்து நகரமாக்கினான். பசு வந்து நீராடிய குளம் ‘சிவ தீர்த்தம்’ என்றும், ‘கோசிருங்கவாவி’ என்றும் அழைக்கப்படுகிறது.

இத்திருக்கோயிலில் சுவாமிக்கும் அம்மனுக்கும் நடுவே பாலமுருகன் சன்னதி அமைப்பெற்றுள்ளது. இது இத்திருக்கோயிலின் தனிச் சிறப்பாகும். இதுவே சோமஸ்கந்தர் என்று அழைக்கப்படுகிறது. இச்சன்னதியில் ‘சஷ்டியப்த பூர்த்தி’ (அறுபது வயது கடந்தவர்களுக்கும்) ‘சதாபிசேகம்’ (எண்பது வயது கடந்தவர்களுக்கும்) திருமணம் நடைபெறுவது மிகச் சிறப்பு வாய்ந்தது.

இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கும் மூர்த்தியின் சிறப்பை உணர்த்தும் உண்மைச் சம்பவம் வருமாறு:-

 எட்டையபுரம் அருகிலுள்ள தெற்கு முத்தலாபுரம் என்ற கிராமத்தில் 51 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பா நாயக்கர் என்பவர் வாழ்ந்து வந்தார். திடீரென ஒரு நாள் நன்றாக இருந்த அவரது இரு கண்களும் பார்வையை இழந்துவிட்டன. அவர் இத்திருத்தலத்து இறைவன் மீது கொண்ட பக்தியினால் திருக்கோயிலுக்கு வந்து தினசரி வாவியில் நீராடி ஈசனை வழிபட்டு 41 நாட்கள் மண் சோறு உண்டு விரதமிருந்தார். 42-வது  நாள் இறையருளால் பார்வை வரப் பெற்றது.

இந்நிகழ்ச்சியினால் இத்திருத்தலத்து இறைவன் இப்பகுதி கக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறார். வீர பாண்டியபுரம் சிற்றசர் காமாட்சி ரெட்டியார் குழந்தைபேறு வேண்டி சோமயாகம் செய்தார். அதனால் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சோமயாகம் செய்ததற்கு சாட்சியாக கிணறு என்றும் வற்றாததாக உள்ளது.

இத்திருக்கோவிலில் சுவாமி சுயம்புலிஙமாக வீற்றிருப்பதால் பசு வந்து அணைந்து பால் சொரிந்துள்ளாதால் சுவாமிக்கு பால் அபிசேகம் செய்த தீர்த்தத்தை அருந்தினால்  புற்று நோய் போன்ற கொடிய நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்த ஆலயத்தில் சித்திரை பெருவிழா, வைகாசி விசாகம், ஆடிப்பூர வளைகாப்பு விழா, நவராத்திரி விழா, கந்த சஷ்டி திருவிழா, திருவாதிரை, மகா சிவராத்திரி விழா ஆகியவை முக்கிய திரு விழாக்களாகும். இங்கு நாள்தோறும் ஐந்து கால பூஜைகள் நடைபெற்று வருகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *