28 ஆண்டுகளுக்கு பின் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி: ஆப்கானிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகள் மோதல்

ஆப்கானிஸ்தான் – ஜிம்பாப்வே இரு அணிகளுக்கிடையே 28 ஆண்டுகளுக்கு பிறகு பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்த ஆண்டு இறுதியில் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு வெளியில் மேற்கொள்ளும் முக்கிய சுற்று பயணமாக இது அமைந்திருக்கிறது.
இந்த தொடரின் டி20 போட்டிகள் டிசம்பர் 9,11,12 தேதிகளிலும், ஒருநாள் போட்டிகள் டிசம்பர் 15,17,19 தேதிகளிலும் நடைபெற உள்ளன. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணியின் இந்த சுற்றுப்பயணத்தில் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் கூடுதலாக இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் சேர்க்க விருப்பம் தெரிவித்தது. இதற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் சம்மதம் தெரிவித்திருக்கிறது.
அதன்படி,கிறிஸ்துமஸ் தினத்துக்கு மறுநாள் டிசம்பர் 26-ம் தேதி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் மோத உள்ளன. தொடர்ந்து, 2025-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி 2-வது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது.
இதற்கு முன்பாக ஜிம்பாபே அணி சொந்த மண்ணில் 1996-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி விளையாடியது. இந்நிலையில், 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சொந்த மண்ணில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. கிறிஸ்துமஸ் தினத்துக்கு மறுநாள் தொடங்கும் டெஸ்ட் போட்டி ‘பாக்சிங் டே’ என்று பரவலாக அழைக்கப்படுகிறது.
