ஓட்டல், ரெஸ்டாரண்ட் வணிகர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் என்ன? டாக்டர் ச.மாரியப்பன் விளக்கம்

ஓட்டல், ரெஸ்டாரண்ட் வணிகர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ச.மாரியப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
1. அனைத்து வகையான உணவு வணிகர்களும், https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில், தங்களது வணிகத்திற்கு சரியான வகையில் உரிமம்/பதிவு சான்றிதழ் பெற வேண்டும்.
2. சந்தேகத்திற்கிடமாக உள்ள மூல உணவுப் பொருட்களையோ, அனுமதியற்ற செயற்கை நிறமிகளை உபயோகிக்க கூடாது.
3. ஒருமுறைப் பயன்படுத்தி ஆறவைத்த சமையல் எண்ணெயை, மறுபடியும் சூடுபடுத்தி பயன்படுத்த கூடாது.
4. பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களின் விபரச்சீட்டில், தயாரிப்பு (அ) பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதி தேதி, உணவு பாதுகாப்பு உரிம எண் உள்ளிட்ட லேபிள் விபரங்கள் அவசியம் குறிப்பிட்டிருக்கின்றதா என்பதை ஆய்வு செய்து கொள்முதல் செய்ய வேண்டும்.
5. காலாவதியான உணவுப் பொருட்களை பயன்படுத்தவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது.
6. உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மொய்க்கா வண்ணமும், தூசிகள் விழாதவாறும் மூடி வைத்தும், கிருமி தொற்று ஏற்படாத சுகாதாரமான சூழலில் வைத்தும் பொது மக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும்.
7. முதல் நாள் தயாரித்த உணவு பொருட்களில் மீதமானவற்றை ப்ரிட்ஜில் வைத்து, அடுத்த நாள் நுகர்வோருக்கு விற்பனை செய்யக்கூடாது. மாறாக அதனை அப்புறப்படுத்தி, பதிவேட்டில் விபரங்கள் பராமரிக்க வேண்டும்.
8. முன்தயாரிப்பு செய்த அசைவ உணவு பொருட்கள் வைக்கப்பட்ட பாத்திரத்தில், முன்தயாரிப்பு செய்த நாள் மற்றும் நேரம் குறிப்பிட வேண்டும்.
9. உணவகங்களில் உள்ள பணியாளர்களுக்கு, தொற்றுநோய்த் தாக்கமற்றவர் என்பதற்கான ஆதாரம் வைத்திருக்க வேண்டும். உணவகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் தலைத்தொப்பி, கையுறை, ஏப்ரன் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் அணிந்திருக்க வேண்டும்.
10. அனைத்துப் பணியாளர்களும் டைபாய்டு தடுப்பூசி உள்ளிட்ட உணவின் மூலமாக பரவக்கூடிய நோய்களுக்கு எதிராக தடுப்பூசி அவசியம் செலுத்தியிருக்க வேண்டும்.
மேலும், நுகர்வோர்களுக்கு உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலக கட்செவி எண்ணிற்கோ அல்லது உணவு பாதுகாப்பு துறையின் TN Food Safety என்ற புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும்.
உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்ட நெறிமுறைகளை வணிகர்கள் பின்பற்ற தவறினால், மேற்கூறிய சட்டத்தின் கீழ் பறிமுதல், வியாபாரம் நிறுத்தம், நியமன அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலரிடத்தில் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு போன்ற கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்றும் கடுமையாக எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
