சுற்றுலா ரெயில் பெட்டியில் அடுப்பு, எரிபொருள் பறிமுதல்; தனியார் நிறுவன மேலாளர் கைது

தீ விபத்து அபாயத்தை தவிர்க்கும் வகையில் ரெயிலில் எளிதில் தீப்பற்றக்கூடிய எரிவாயு சிலிண்டர், ஸ்டவ், மண்ணெண்ணெய், பெட்ரோல், அமிலங்கள் மற்றும் வெடிக்கக் கூடிய பொருட்கள் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த தடையை மீறி மதுரையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26 அன்று அதிகாலை சுற்றுலா ரெயில் பெட்டியில் சமையலின் போது தீப்பற்றி 9 பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பிறகு சுற்றுலா ரெயில் பெட்டிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
திருநெல்வேலி ரெயில் நிலையத்தில் மதுரை – புனலூர் ரெயிலில் இணைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரெயில் பெட்டியில் நேற்று அதிகாலையில் சோதனை நடத்திய ரெயில்வே வர்த்தக பிரிவு ஆய்வாளர் எம்.அரவிந்த், சமையலுக்கு வைக்கப்பட்டிருந்த அடுப்பு மற்றும் அடுப்புக்கரியை கண்டுபிடித்து பறிமுதல் செய்தார்.
பின்னர் சட்டபூர்வ மேல் நடவடிக்கைக்காக ராஜஸ்தானை சேர்ந்த தனியார் சுற்றுலா மேலாளர் சதீஷ் சந்த் (வயது 64) என்பவரை திருநெல்வேலி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைத்தார். அவரை போலீசார் கைது செய்தனர் இந்த சுற்றுலா ரெயில் பெட்டியில் 59 பயணிகள் இருந்தனர்..
