“கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு எழுத்தர் பதவிக்கு தனி இட ஒதுக்கீடு” கோவில்பட்டி மாநாட்டில் வலியுறுத்தல்
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் கோவில்பட்டி கோட்ட 5-வது மாநாடு நடந்தது. கோவில்பட்டி தலைமை அஞ்சலக வளாகத்தில் நடந்த மாநாட்டுக்கு கோட்டத் தலைவர் வி.கணேசமூர்த்தி தலைமை தாங்கினார் . செயலாளர் பிச்சையா,பொருளாளர் பட்டுராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
சங்க துணை தலைவர் ஜி.கிருஷ்ணசாமி சங்க கொடியேற்றினார். கோட்ட அமைப்பு செயலாளர் ஹரிப்பிரகாசம் வரவேற்றார். மாநாட்டில், தமிழ் மாநில தலைவர் என்.இராமசாமி, மாநில செயலாளர் ஜி.சாந்தமூர்த்தி, மேற்கு மண்டல செயலாளர் என்.தர்மலிங்கம், மாநில உதவிச் செயலாளர் எஸ்.கே.ஜேக்கப்ராஜ், அகில இந்திய துணைப் பொதுச்செயலாளர் எம்.பாஸ்கரன், மாநில துணை செயலாளர் ஐ.ஞானபாலசிங், மாநில உதவிச் செயலாளர் எஸ்.செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
*கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு எழுத்தர் பதவிக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
*கிராமிய அஞ்சல் ஊழியர்களிலிருந்து தபால்காரர் பதவிக்கு மீண்டும் சீனியாரிட்டி முறையை அமல்படுத்த வேண்டும்.
*கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்க உள்ள 3 கட்ட பதவி உயர்வை, இலாகா ஊழியர்களுக்கு வழங்குவது போல் வழங்க வேண்டும்.
*கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்.
* கிராமிய அஞ்சல் ஊழியர்கள் பணி ஓய்வுக்கு பின் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
மேற்கண்டவை உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.