கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜர் ஆனவரை வெட்டிக்கொன்ற கொடூரம்
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மகன் வடிவேல் முருகன் (வயது 28). இவர் ஒரு கொலை வழக்கு தொடர்பாக இன்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
பின்னர்மோட்டார் சைக்கிளில் ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி -நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் பொட்டலூரணி விலக்கு அருகே சென்றபோது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் தாக்கினர்.
இதையடுத்து வடிவேல் முருகன் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவி்ட்டு உயிர் பிழைக்க காட்டிற்குள் தப்பிச் ஓடினார்… ஆனாலும் மர்ம நபர்கள் அவரை விடவில்லை. தொடர்ந்து விரட்டிசென்று அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் பலத்த காயம் அடைந்த வடிவேல் முருகன் தப்பிக்க வழியின்றி அங்கேயே ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார். சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்து விட்டது.. இதை தொடர்ந்து கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் வடிவேல் முருகன் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.