நடுரோட்டில் மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிய கணவர்
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை அல்லிக்குளம் கிராமத்தில் வசிப்பவர் பொன்தங்கம் என்ற குணா (வயது 35). இவரது மனைவி அமராவதி (28). இவர் மகளிர்குழு தலைவியாக உள்ளார். இத்தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு ஏற்பட்டு வந்தது,. இந்த நிலையில் இன்று காலை அமராவதி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சுய உதவிக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்ததும் பகல் 12 மணி அளவில் தனது இரு சக்கர ஸ்கூட்டரில் வீட்டுக்கு புறப்பட்டார்.
தூத்துக்குடி திருநெல்வேலி ரோடு கோரம்பள்ளம் பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது எதிரே வந்த அவரது கணவர் பொன் தங்கம் என்ற குணா, அவரை வழி மறித்து சரமாரியாக கழுத்தில் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அமராவதி கழுத்தில் பின்பக்க பகுதியில் பலத்த வெட்டு காயத்துடன் ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தார்.
இதை தொடர்ந்து குணா அங்கிருந்து அவரது பைக்கில் தப்பி சென்று விட்டார். பட்டப் பகலில் அமராவதி பலத்த காயத்துடன் ரோட்டில் கிடப்பதை பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அவரது கணவர் பொன் தங்கம் என்று குணாவை தேடி வருகிறார்கள்.