பாண்டவர்மங்கலத்தில் புதிய ரேஷன்கடை கட்டிடம்; அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்

கோவில்பட்டி அருகே கிளவிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கே.துரைச்சாமிபுரத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.09 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமையலறை கட்டிடத் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு உதவி கலெக்டர் கவுரவ் குமார் தலைமை தாங்கினார். அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு சமையலறை கட்டிடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்.


இதனை தொடர்ந்து பாண்டவர்மங்கலம் ஊராட்சி கீழ பாண்டவர்மங்கலம் கிராமத்தில் ரூ.12.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதியரேஷன்கடை கட்டிடத்தை திறந்து வைத்து, பொருட்கள் விநியோகத்தை தொடங்கி வைத்தார்.
முன்னதாக விஜயாபுரி கிராமத்தில் ரூ.12 லட்சத்தில் கட்டப்பட உள்ள தி.மு.க. மன்றத்துக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். கீழ பாண்டவர்மங்கலம் கிராமத்தின் நுழைவாயிலில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கிராம மக்கள் சார்பில் ரூ.15 லட்சத்தில் அமைக்கப்பட உள்ள நுழைவு வாயில் கட்டும் பணியையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
மேலும் அந்த கிராமத்தில் நடந்த கருணாநிதி நூற்றாண்டு விழாவில் 200 பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சிகளில், வட்டார வளர்ச்சி அலுவலர் கி.ராணி, தாசில்தார் லெனின், தாலுகா விநியோக அதிகாரி செல்வகுமார், நகராட்சிதலைவர் கா.கருணாநிதி, யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், ஒன்றிய திமுக செயலாளர் வீ.முருகேசன், தி.மு.க. மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கே.சண்முகராஜ், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரா.ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
