செந்தில்பாலாஜி அமைச்சர் பதவி நீக்கம் உத்தரவு நிறுத்தி வைப்பு ; ஸ்டாலினுக்கு கவர்னர் கடிதம்
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று உத்தரவு பிறப்பித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவுக்கு முதல்-அமைச்சர், அமைச்சர்கள், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. நிறுத்தி வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் கொடுத்த அழுத்தத்தால் அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜி நீக்கம் தொடர்பான உத்தரவை கவர்னர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ரவி அனுப்பிய கடித்ததில் கூறி இருப்பதாவது:-
தேவையற்ற ஆபத்தை தவிர்க்க முடிவு எடுப்பதற்கு முன் (prudent) மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்க வேண்டும் என்று உள்துறை மந்திரி எனக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஆகையால் நான் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் கருத்தை கேட்க உள்ளேன். அதுவரை செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி பிறப்பித்த உத்தரவு அடுத்த உத்தரவு வரும் வரை நிறுத்திவைக்கப்படுகிறது
இவ்வாறு கவர்னர் கூறி இருக்கிறார்.