கோழிக்கூண்டுக்குள் புகுந்த பாம்பு; தீயணைப்பு படையினர் பிடித்து காட்டில் விட்டனர்
கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி கிராமம் பெருமாள் கோவில் தெருவில் குடியிருப்பவர் ராமமூர்த்தி (வயது 42). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். வீட்டில் இவரது மனைவி முருக வேணி 2 குழந்தைகளுடன் குடியிருந்து வருகிறார். இவர்கள் வீட்டு முன்பு கோழி கூண்டு வைத்து, கோழி வளர்த்து வருகிறார்கள்.
கூண்டுக்குள் இருந்து காலை நேரத்தில் கோழிகளை திறந்து மேயவிட்ட முருகவேணி, மாலை நேரத்தில் கோழிகளை கூண்டுக்குள் அடைத்து பூட்டினார். சிறிது நேரத்தில் கூண்டுக்குள் அடைத்த கோழிகள் கத்தின. உடனே முருக வேணி கூண்டு அருகே போய் பார்த்தபோது, உள்ளே பெரிய நல்ல பாம்பு கோழி குஞ்சை கவ்வியபடி கிடந்தது.
இதுபற்றி பஞ்சாயத்து துணை தலைவர் காசி ராஜனுக்கு, முருக வேணி தகவல் கொடுத்தார். அவர் வந்து பார்த்து விட்டு கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
சிறிது நேரத்தில் தீயணைப்பு படை அதிகாரி சுந்தர்ராஜ் தலைமையில் வீரர்கள் வந்து கோழி கூண்டில் கிடந்த 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் அதனை குருமலைக்கு கொண்டு காட்டில் விட்டனர்,