• May 9, 2024

கோவில்பட்டியில் கணவன்-மனைவி கழுத்தை அறுத்து கொலை; பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த மர்மம்

 கோவில்பட்டியில் கணவன்-மனைவி கழுத்தை அறுத்து கொலை; பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த மர்மம்

கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள பெருமாள் நகரை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 41) கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பரணிசெல்வி (39). இவர் லாயல்மில் காலனியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவர்களுக்கு மனோஜ் (18) என்ற மகனும், உமா (14) என்ற மகளும் உள்ளனர்.
இவர்கள் கடந்த ஜூலை மாதம் பெருமாள் நகரில் புதியதாக வீடு கட்டி குடியேறினர். வீடு கட்டுவதற்காக பலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதுதொடர்பாக கணவன்- மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலையில் மனோஜ் பெட்டி கடைக்கும், உமா வெளியேயும் சென்று விட்டனர். இதனால் கணவன்-மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர்.
இரவில் கடையில் இருந்து மனோஜ் வீட்டிற்கு வந்தார். கதவை தட்டிய போது திறக்கவில்லை. உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மனோஜ் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது, வீட்டின் உள்ளே ராஜபாண்டி, பரணிசெல்வி ஆகியோர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தாயும் தந்தையும் இறந்து கிடப்பதை நேரில் கண்ட மனோஜ், உமா இருவரும் அலறி துடித்தனர், அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானப்படுத்தினர்.
இதற்கிடையே ராஜபாண்டி-பரணிசெல்வி உடல்களை போலீசார் கைப்பற்றி கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். கொலை நடந்த வீட்டில் ஏதாவது தடயங்கள் கிடைக்கிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.
கடன் பிரச்சினை காரணமாக ராஜபாண்டி தனது மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் கணவன்-மனைவி இருவரையும் வேறு யாரேனும் மர்ம நபர்கள் கொலை செய்து இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனால் வீடு உள்புறம் பூட்டி இருந்ததால் இதில் மர்மம் நிலவுகிறது. எனினும் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *