• June 6, 2025

ஓடும் பஸ்சில் பிக்பாக்கெட்…(சிறுகதை)

 ஓடும் பஸ்சில் பிக்பாக்கெட்…(சிறுகதை)

கோவில்பட்டியிலிருந்து சாத்தூருக்கு புறப்பட்டது… அந்த பஸ்.. எல்லா நிருத்தங்களிலும் நின்று செல்லும்..இந்த பஸ்சைவிட்டா ஒருமணி நேரம் கழிச்சுதான் அந்த ஊருக்கு செல்லவேண்டிய பஸ் வரும்.
இதனால் பஸ்சில் பயணிகள் முண்டியடித்து கொண்டு ஏறினார்கள். பஸ் நிரம்பி வழிந்தது. கண்டக்டர் ..பாய்ந்து பஸ்சில் ஏறினார். உள்ளே போங்க, உள்ளே போங்க..வாசலில நிக்காதீங்க..என்று கத்தினார்.
எங்கேய்யா போறது..கால்வைக்க கூட இடம் இல்லை.மூச்சுகூட விடமுடியல..உள்ளே போ..உள்ளே போன்னா எங்கய்யா போறது..என்றார் ஒருபாட்டி.
உடனே கண்டக்டர்..கோபப்படாத. பாட்டி..கொஞ்சம் உள்ளே போ..இன்னும் ஆட்கள் ஏறணுமுல்ல..எல்லாம் கீழே நிக்காங்க..என்று மென்மையாக சொன்னார்
பாட்டி அசையவில்லை. ஏம்.பாட்டி. உள்ளே போகலாமுல்ல..ஏன் இப்படி. பெரிய பையை வேறவச்சிட்டு.. வழியைவிடமாட்டேங்கிற..என்றார் கண்டக்டர்.
பாட்டி…ஏய்…நான்பாதியிலே இறங்கணும்..உள்ளே போனமுன்னா..இறங்கு முன்னால கூட்டத்தில் சிக்கி படாதபாடுபட்டுறுவன் என்றார். கண்டக்டர் உண்மையை உணர்ந்து.. சரி பாட்டி..அந்த பையை அங்கே வை..கொஞ்சம் ஒதுங்கி நில்லு என்று சொன்னார்.
அவர் போனா போகட்டுமுன்னு..கொஞ்சம் அசைந்தார். கண்டக்டர்..நிம்மதி பெருமூச்சு விட்டபடி..பஸ்படிக்கட்டில் நின்றவர்களை பார்த்து உள்ளே வாங்க..உள்ளே வாங்க..என்று சத்தம் போட்டார். வளைந்து நெளிந்து இருவர் உள்ளே வந்தார்கள். உள்ளே இருக்கும் கூட்டத்தை பார்த்துவிட்டு..அப்பாடா ஒரே புழுக்கம்..ஏம்பா பஸ்சை எடுங்கப்பா..அவியுது..கூட்டம் ஏறுனது பத்தாதா. வண்டியை சாட் பண்ணுங்கப்பா..என்று கத்தினர்.
டீக்கடையில் நின்று டீ குடித்து கொண்டிருந்த டிரைவர் சத்தம் கேட்டு..வேகமாக வந்து பஸ்சில் ஏறினார். அப்பாடா..டிரைவர் வந்திட்டாரு.பஸ்சை எடுத்துருவாரு என்று பயணிகள் நினைத்து சந்தோசப்பட்டனர்.
டிரைவர்…டேப்ரிக்கார்டரில்..பட்டனை அழுத்தினார். ஒரு பழைய பாடல் ஒலித்தது. கொடி அசைந்ததும் காற்று வந்ததா..காற்று வந்ததும் கொடி அசைந்ததா..என்ற பாடல் ..தவழ்ந்தது. பஸ்சில் பின்னால் நின்ற ஒருவர்..ஏங்க..காத்தே வரல அப்புறம்..கொடி எங்கே அசையுறது .வண்டியை எடுங்கப்பா..என்று கத்தினார்.
டிரைவர்..கீழே இறங்கி பஸ் கண்ணாடியை துடைத்து கொண்டிருந்தார்..கண்டக்டர் டிக்கெட் போட தொடங்கினார். டிக்கெட்..டிக்கெட்..டிக்கெட்…என்றார். சீக்கிரம் டிக்கெட்டை போடுய்யா. அப்பதான் டிரைவர் வண்டியை எடுப்பார் என்றார் ஒருவர்.
கண்டக்டர் டிக்கெட் கொடுப்பதில் மும்முரமானார். சில்லறையை கொடுங்க..எல்லாரும் நோட்டை நீட்டுனா என்ன பண்ணுறது ..என்று சத்தம் போட்டபடி டிக்கெட்டைகிழித்து கொடுத்தார்..தள்ளுங்க முன்ன போங்க.முன்ன போங்க என்றபடி கண்டக்டர் கூட்டத்தில் நீந்தி..நெளிந்து.. ஒவ்வொரு பகுதியாக கடந்தார்.
பஸ் நிலையத்துக்குள் சாத்தூர் செல்லும் மற்றொரு பஸ்வந்தது. அதை பார்த்ததும் டிரைவர் பஸ்சில் ஏறினார். உடனே கண்டக்டர் விசில் அடித்தார்.பஸ் புறப்பட்டது. பஸ்நிலையத்துக்குள் நின்று கொண்டிருந்த..கபாலி ஓடி வந்து பஸ்சில் தாவினார். படிக்கட்டில் நின்றவர்களை பார்த்து உள்ளே போங்க..என்றபடி.உள்ளே நுழைய முயன்றார்.தட்டுதடுமாறி ஏறி மேலே வந்தார்.
அப்பா.நல்ல கூட்டம்..என்றவாறு கர்சிப்பை எடுத்து முகத்தை துடைத்து கொண்டார். பஸ்சின் வேகம் கூடியது. அப்பாடா.. இப்பதான் காத்து வருது .என்றனர் சிலர்…சின்ன ஸ்டாபிலேயும் பஸ் நின்று சென்றது. சிலர் இறங்கினார்கள். கண்டக்டர் முன்பகுதியில் டிக்கெட் கொடுத்துவிட்டு.. மீண்டும். பின்பகுதிக்கு மெல்ல வந்தார்.
எல்லோரும் டிக்கெட்டை பத்திரமா வச்சிக்கிங்க..வழியிலே செக்கிங் இருப்பாங்க..என்று எச்சரித்தார். பாட்டி. டிக்கெட்..எடுத்தாச்சா..என்று கேட்டார். எத்தன.டிரிப்பு எடுக்கிறது.. இன்னாபாரு..டிக்கெட்டு என்று சேலைமுந்தானையில் முடிந்துவைத்திருந்த டிக்கெட்டை எடுத்து காட்டினார். சரி பாட்டி..பத்திரமா வச்சுக்க..என்ற கண்டக்டர் …பின்னால யாரெல்லாம்..டிக்கெட் எடுக்கணுமுன்னு கேட்டு டிக்கெட்டு கொடுத்தார்.
கபாலி டிக்கெட் எடுக்கவில்லை. தனக்கு.முன்னால் நின்ற வாலிபரின் பேண்ட் பின்பக்க பாக்கெட் பெரிதாக இருப்பதை நோட்டமிட்டுக்கொண்டிருந்தான். பஸ் ஒரு ஸ்பீடு பிரேக்கில் ஏறி இறங்கிய போது..அதை சாக்காக வைத்து..அந்த வாலிபர் மேல் சாய்ந்து அவரது பின்பாக்கெட்டிலிருந்த…பர்ஸை விரல் விட்டு எடுக்க பார்த்தார். முடியவில்லை.
அந்த நேரம் பார்த்து கண்டக்டர்..என்ன எடுத்தாச்சா என்று கபாலியிடம் கேட்டார். கபாலி எடுக்கல..என்றார். ஏன் எடுக்கல..என்று கண்டக்டர்..கேட்க..கபாலி. கோபத்தில்..இவ்வளவு கூட்டத்தில் உடனே எப்படி எடுக்க முடியும்..பஸ் குலுங்கி குலுங்கி போறதால.. கம்பியை பிடிக்காம நிக்க முடியல..பேண்ட்பாக்கெட்டுக்குள்ளே கைவிட்டு பர்சை எடுக்க முடியல..என்றார்.
ஏய்.நீ வேட்டிதான உடுத்திருக்க..பிறகு பேண்ட் பாக்கெட்டுல பர்சை எடுக்கமுடியல என்கிற..என்று மடக்கினார் கண்டக்டர். கபாலி உஷாராகி. .அப்படியா சொன்னேன்..பஸ்சு தூக்கி போடுறதால..நாக்கு தடுமாறிட்டு..நீங்க இங்கே நின்னுக்கிட்டு இருந்தீங்கன்னா..என்னால பர்ஸை எடுக்கமுடியாதுங்க..நீங்க.முன்னே போங்க…நான் பர்சை எடுத்துட்டு உங்கள கூப்பிடுறன்..என்றார்.
சரி ,சரி நீ எங்க போகணும் ..என்று கேட்டார் கண்டக்டர். கபாலி..கடுப்பாகி.. போகும்போதே எங்க போறான்னு கேட்டா. .காரியம் உருப்படுமா ..என்றார்.கண்டக்டர்..என்னய்யா இது பஸ்சிலே எல்லாத்துகிட்டேயும்..எங்க போறீங்கன்னுதான் கேட்டு டிக்கெட்டு கொடுக்கிறன்..நீ மட்டும் கோபப்படுற .. என்றார்.
பர்ஸை எடுக்கிறது எவ்வளவு கஷ்டமுன்னு எனக்கு தானதெரியும்…அங்க..போங்க..பர்ஸை எடுத்ததும் டிக்கெட் எடுக்கிறேன்..என்றார் கபாலி. .உடனே கண்டக்டர்..பஸ் டிக்கெட்டுக்குரிய காசை எடுத்து சட்டைப்பையிலே வச்சிக்கிட்டு வரவேண்டியதுதானே..என்று திட்டிவிட்டு..அடுத்த பகுதிக்கு போனார். வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்ணுறோம்..என்ற கபாலி..முன்னால நின்ற வாலிபரின் பேண்டு பாக்கெட்டிலிருந்து பர்ஸை மீண்டும் எடுக்க முயன்றார்.முடியவில்லை
இனி ஆபரேசன்தான் என்றபடி தன்பாக்கெட்டில் வைத்திருந்த சின்ன கத்தியை எடுத்து. அந்த வாலிபரின் பேண்ட் பாக்கெட்டிலிருந்து .ஒரு இழுப்பு…பர்ஸ் வெளியே எட்டிப்பார்த்தது. கபாலி அந்த பர்சை எடுத்து தன் பாக்கெட்டுக்கு மாற்றினார். பர்சை இழந்த வாலிபரோ, முன்னே..நின்ற பெண்ணின் அழகில் மயங்கி..அவரது புன்னகை என்ன விலை என்று கணக்கு போட்டுக்கொண்டிருந்தார்.
கபாலி..தான் எடுத்த.பர்சிலிருந்த வாலிபரின் படத்தை எடுத்து கீழே போட்டுவிட்டு தனது பாஸ்போர்ட் சைஸ்படத்தை வைத்தார். பஸ் சென்று கொண்டிருந்தது.அடுத்த ஸ்டாப் வந்ததும்..பாட்டி பெரிய பையை தூக்கிக்கொண்டு..தட்டு தடுமாறி கீழே இறங்க முயன்றார்.கண்டக்டர்..பாட்டி..நீ இறங்கு..நான்.பையை தூக்கித்தாரன்..என்றபடி..பையை தூக்கிகொடுத்தார்.பாட்டி கீழே இறங்கி பையை வாங்கிக்கொண்டார்.
பாட்டி மெல்ல நடந்தார். கண்டக்டர் அந்த பாட்டியை பார்த்து..வயசான காலத்துலேயும்..உழைச்சு பிழைக்கணுமுன்னு பாட்டி நினைக்குது..கிராமத்திலே தான் வச்சிருக்கிற கடைக்கு .தினமும் கோவில்பட்டியிலிருந்து..பொருட்கள் வாங்கிட்டு போவுது. இது வயசுலே நாம எப்படி இருப்போமுன்னு தெரியல..என்று சொன்னவர் விசிலை எடுத்து ஊதினார்.
பஸ் மீண்டும் புறப்பட்டது.பேண்ட் சட்டையுடன் முன்பக்கத்தையே பார்த்து கொண்டிருந்த வாலிபர் டிக்கெட் எடுத்தாரா என்ற சந்தேகம் வந்தது.அந்த வாலிபரின் தோளை தட்டி..தம்பி டிக்கெட் எடுத்திட்டீங்களா..என்று கேட்டார். அந்த வாலிபர் சுயநினைவுக்கு வந்து…இல்ல..இல்ல..இதோ எடுக்கிறேன் என்றபடி பேண்ட்பாக்கெட்டில் பர்ஸை தேடினார்.
பாக்கெட்டே கிழிந்து தொங்கியது.அய்யோ..என் பர்சை காணம்..என் பர்சை காணம்..யாரோ பிக்பாக்கெட் அடிச்சு ட்டாங்க .என்று கத்தினார். அந்த கத்தலை கேட்டு டிரைவர் பஸ்சை நிறுத்தினார். கண்டக்டர் சந்தேகப்பட்டு .கபாலி நிக்கிறானா என்று பார்த்தார். காணவில்லை. இந்த வயதிலும் உழைக்கும்..பாட்டி இறங்கிய ஸ்டாப்பில்..உழைக்கும் வயதில் உழைக்காமல் பிக்பாக்கெட் அடித்து கொண்டு ஊதாரியாக சுற்றும் கபாலி இறங்கி போனதை யாரும் கவனிக்கவில்லை.
வே.தபசுக்குமார்-தூத்துக்குடி

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *