ஆட்சியை கவிழ்க்க திமுக ரூ.50 கோடி பேரம் பேசியதாக ஶ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ பரபரப்பு குற்றச்சாட்டு
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தால் ரூ.50 கோடி தருவதாக பேரம் பேசியதாக ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ விஜி சரவணன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ விஜி சரவணன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: –

“எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தால் சுமார் ரூ.50 கோடி தருவதாகக் கூறினர். மேலும், திமுகவுக்கு வந்தால் அமைச்சர் பதவி தருவதாகவும் பேரம் பேசினர்.
திமுக முக்கிய நிர்வாகி அனிதா ராதாகிருஷ்ணன் ஆட்கள் என்னிடம் இந்த பேரத்தை நடத்தினர். இந்த பேரத்திற்கு இணங்காவிட்டால் என்ன செய்வோம் என்று தெரியாது என மிரட்டல் விடுத்தனர்”
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், தன்னிடம் பேரம் பேசியதாகக் கூறப்படும் தொலைபேசி ஆடியோ ஆதாரம் ஒன்றையும் விஜி சரவணன் வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தனது வெற்றியால் ஏற்பட்டுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் இணைந்து சமூக வலைதளங்களில் தன் மீது அவதூறு பரப்புவதாகவும் விஜி சரவணன் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் தவெக எம்.எல்.ஏ-வை விலைக்கு வாங்க ரூ.180 கோடியில் சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமாரைப் போலீசார் தேடி வருகின்றனர். தவெக ஆட்சியைத் தக்கவைக்க/கலைக்க இருதரப்பிலும் குதிரை பேரக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள சூழலில், அண்மையில் அதிமுகவிலிருந்து 6 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர்.

இந்த அரசியல் குதிரை பேரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், அமைச்சரவைக் கூட்டத்தில் தனிநபர்கள் பங்கேற்றது குறித்தும் விசாரிக்கக் கோரி திமுக, அதிமுக, பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் இணைந்து கவர்னர் ஆர்.வி.அர்லேகரிடம் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.







