தேர்தல் நடத்தை விதிகள் அமல்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உள்ளிட்ட திட்டங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகின்ற 23.4.2026 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட உடனே தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதால், தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் நலத்திட்ட நிகழ்வுகள் தேர்தல் முடியும் வரை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கள் கிழமையும் நடைபெறும் வாராந்திர மனு விசாரணை கூட்டம், கிராமங்கள் தோறும் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள், உங்களைத் தேடி உங்கள் ஊரில் அரசு அதிகாரிகளின் கள ஆய்வு மற்றும் குறைதீர்ப்புத் திட்டம், இந்தத் திட்டங்கள் அனைத்தும் தேர்தல் நன்னடத்தை விதிகள் முடிவடையும் வரையில் நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவித்துள்ளார்.







