ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்தவருக்கு 3 ஆண்டு சிறை
திருநெல்வேலி மாவட்டம் அன்பு நகரை சேர்ந்த சிவராமன் (வயது 65) என்பவர் தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தை சேர்ந்த 4 இளைஞர்களிடம் அறிமுகமாகி ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி 26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட 4 இளைஞர்கள் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு 1-ல் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி வழக்கை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் -IV ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி. பாக்கியராஜ் எதிரி சிவராமன் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு மோசடி குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.8,000/- அபராதம் விதித்து தீர்ப்பு விதித்தார்.
இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த மாவட்ட குற்றப்பிரிவு – I காவல் துணை கண்காணிப்பாளர் மயில்சாமி மற்றும் இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த மாவட்ட குற்றப்பிரிவு – I காவல் ஆய்வாளர் லட்சுமி பிரபா, அப்போதைய உதவி ஆய்வாளர். அனிதா ஆகியோரையும், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் (பொறுப்பு). முருகப்பெருமாள்,, வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் வைரமணி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் பாராட்டினார்.







