தூத்துக்குடியில் ரூ. 1 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயிலுடன் 2 பேர் கைது
தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளரஅருளப்பன் தலைமையில் சார்பு ஆய்வாளர். முத்துராஜா, சிறப்பு சார்பு ஆய்வாளர் சிவன் மற்றும் போலீசார் நேற்று (07.01.2026) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில் பிள்ளைவிளை சந்திப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த தூத்துக்குடியை சேர்ந்த ராஜேஷ் (39) மற்றும் பிரான்சிஸ் (22) ஆகியோரை சோதனை செய்ததில் அவர்கள் கஞ்சா ஆயில் வைத்திருந்தது தெரியவந்தது.

உடனடியாக போலீசார், 2 நபர்களையும் தாளமுத்துநகர் காவல் நிலையம் அழைத்து வந்தனர். ஆய்வாளர் அருளப்பன் வழக்கு பதிவுசெய்து 2 போரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
கஞ்சாவுக்கு பதில் கஞ்சா ஆயிலை டிஸ்யூ பேப்பரில் தடவி உறிஞ்சும் புதிய போதை பழக்கம் தமிழகத்தில் தலைதூக்கியுள்ளது.இந்த நிலையில் தூத்துக்குடியில் கஞ்சா ஆயில் வைத்திருந்த 2 பேரை கைது செய்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் பாராட்டினார்.

இதுபோன்று கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றை முற்றிலும் தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு “DrugFreeTN” எனும் செயலியை உருவாக்கியுள்ளது. மேற்படி செயலியின் மூலம் பொதுமக்கள் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை குறித்த தகவல்களை தயங்காமல் புகார் அளிக்கலாம். மேலும் புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது,.
தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பழக்கத்தை குறைக்கும் நோக்கத்தோடு, தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது தனி கவனம் செலுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுபோன்ற போதை பொருள்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
***…







