• March 6, 2026

தோல்வி பயத்தால் காவல்துறைக்கு நெருக்கடி கொடுத்து நம் செயல்பாட்டை முடக்க நினைக்கிறார்கள்; திமுக அரசு மீது விஜய் கண்டனம்

 தோல்வி பயத்தால் காவல்துறைக்கு நெருக்கடி கொடுத்து நம் செயல்பாட்டை முடக்க நினைக்கிறார்கள்; திமுக அரசு மீது விஜய் கண்டனம்

தவெக தலைவர் விஜய், 13-ந்தேதி தனது முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்க இருக்கிறார். இதற்கான அனுமதி பெறுவதற்காக புஸ்ஸி ஆனந்த் வந்திருந்தபோது அவரை வரவேற்பதற்காக ஏராளமான த.வெ.க. தொண்டர்கள் விமான நிலையத்துக்கு திரண்டு வந்தனர்.

அப்போது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் புஸ்ஸி ஆனந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு;

தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மீதும், கட்சித் தோழர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
மக்களிடையே செல்வாக்கை இழந்த தற்போதைய ஆளும் கட்சி, யாருக்குப் பயப்படுகிறதோ இல்லையோ? தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என்பது மட்டும் மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது.

தேர்தல் பிரசாரப் பயணம் என்பது, அனைத்துக் கட்சிகளும் மேற்கொள்ளும் ஜனநாயகப்பூர்வமான பிரதான நடவடிக்கைதான். மற்ற கட்சிகளின் இது போன்ற நடவடிக்கைகளைச் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் இந்த வெற்று விளம்பர மாடல் அரசு, நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது.
தோல்வி பயத்தால் ஆட்சியாளர்கள் தங்களின் தூக்கத்தை இழந்து முழு நேரமும் நம்மை வீழ்த்துவதைப் பற்றியே சிந்தித்து, காவல் துறைக்கு நெருக்கடி கொடுத்து நம் செயல்பாட்டை முடக்க நினைக்கிறார்கள்.

அதன் ஒரு பகுதிதான், திருச்சியில் நமது கட்சி பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மற்றும் கட்சி தோழர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கு. திமுக அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, என்.ஆனந்த் மீதும், கழகத் தோழர்கள் மீதும் பதியப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு விஜய் கூறி உள்ளார்..


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *