கோவில்பட்டியில் 3 மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பிரசார பயணத்தை மாவட்ட வாரியாக மேற்கொண்டுள்ளார்.
.அந்த வகையில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட விளாத்திகுளத்தில் ஜூலை 31-ம் தேதியும், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரத்தில் ஆக.1-ம் தேதியும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய உள்ளார். தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார்.

. இதுதொடர்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ மகாலில் நடந்தது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.. தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன், திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ., தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் குட்டியப்பா என்ற கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-
“இன்றைக்கு இருக்கக்கூடிய சூழ்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம். திமுக அரசு வீட்டுக்கு போவது உறுதி. இது எந்த திட்டமும் செய்யாத ஆட்சியாக உள்ளது. சட்டம் ஒழுங்கு முழுமையாக சீரழிந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்த 4 ஆண்டுகள் 2 மாதங்களில் சிறப்பான திட்டங்களை கொடுத்துள்ளார். ஒரு விவசாயி நாட்டை சிறப்பாக ஆள முடியும் என நிரூபித்தார்.
இன்று அவருக்கு மக்கள் எழுச்சியுடன் வரவேற்பு அளிக்கின்றனர். அவர் மீண்டும் முதல்வராக வர வேண்டுமென கூறுகின்றனர். எடப்பாடி பழனிசாமி செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது. அவர் நிச்சயமாக முதல்வராக வருவது உறுதி. 2026-ல் அதிமுக ஆட்சி அமையும். இன்னும் அதிகமான கட்சிகள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணிக்கு வரும். கண்டிப்பாக 210 தொகுதிகள் அதிமுக தலைமையிலான கூட்டணி பெறும்,.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன் தாஸ் பாண்டியன், திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி, கோவில்பட்டி நகரச் செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் 3 மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.







