மோசடி புகார்: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மகன் கைது

தூத்துக்குடி மாநகராட்சி 59 வது வார்டு மாமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி மாநகர அதிமுக தெற்குப் பகுதி செயலாளராகவும் இருந்து வருபவர் எஸ்.பி.எஸ்.ராஜா. அதிமுக முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ஆவார்.
இந்நிலையில் சென்னையில் தான் புதிதாக தொடங்கவுள்ள தொழில் நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி தனது சகோதரி பொன்னரசி என்பவரிடம் ரூ.17 கோடியை கடனாக பெற்றதாகவும், மேலும் பணம் பெற்று முறையாக பங்குதாரராக சேர்க்காமல் மற்றும் உரிய பணத்தை திரும்ப வழங்காததால் சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ரூ.17 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அதிமுக அமைச்சரான எஸ்பி சண்முகநாதன் மகன் எஸ்பிஎஸ் ராஜா மீது வழக்குப் பதிவு செய்ததோடு, வெளிநாட்டிற்கு தப்ப முயன்ற அவரை சென்னை விமான நிலையத்தில் வைத்து சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் விசாரணை நடக்கிறது .
