தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்; ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று (2.6.2025) நடைபெற்றது.
பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 472 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 36 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் திறன் வளர்ச்சி மேம்பாட்டுக் கழகத்தில் 15 நாட்கள் Advance course முடித்த 15 சிறுபான்மையின மகளிருக்கு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் மற்றும் ரூ.84 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும் வழங்கினார்.

மேலும் கொரான நோய்த்தொற்றால் உயிரிழந்த நியாய விலைக் கடை பணியாளர் ராமசாமி என்பவரின் வாரிசுதாரரான ரா. தமிழ்செல்வி என்பவருக்கு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து ரூ.25 லட்சம் நிவாரணத் தொகையையும், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்துகளில் மரணமடைந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் நிவாரணத் தொகைகளையும், தாட்கோவின் கீழ் செயல்படும் தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத்தின் மூலம் 1 பயனாளிக்கு ரூ.1000க்கான கல்வி உதவித்தொகையையும்ஆட்சியர் இலம்பக்வத் வழங்கினார்.

இதுதவிர கயத்தார் வட்டம் சின்னக்காலனியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரூ.1.55 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக் கூடத்தின் நிர்வாகப் பொறுப்பினை ஒப்படைப்பு செய்வதற்கான ஆணைகளை அப்பகுதி மருதம் மகளிர் குழுவினரிடம் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், தாட்கோ மாவட்ட மேலாளர் ஜெனிஷிஸ் ம. ஷியா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
