மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கோரி கோவில்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


கடந்த ஆண்டு பெய்த பெருமழையில் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு அரசு அறிவித்த வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென வலியுறுத்தி இன்று கோவில்பட்டியில் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வெள்ளத்துரை பாண்டி, அவைத்தலைவர் வெங்கடசாமி, மாவட்ட துணைத் தலைவர் சாமியா, ஓட்டப்பிடாரம் வட்டாரத் தலைவர் தொப்பத்துரை மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

தொடர்ந்து அவர்கள் கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் வழங்கிய மனுவில் கூறி இருந்ததாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த பெருமழையில் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. அதனை காலதாமதm இல்லாமல் வழங்க வேண்டும்.

பயிர் காப்பீட்டுத் தொகை உரிய நேரத்தில் வழங்கினால், விவசாயிகள் நடப்பு நிதியாண்டில் விவசாயம் செய்ய உறுதுணையாக இருக்கும். ஆந்திரா மாநிலத்தில் ஏக்கர் ஒன்றுக்கு விதைப்பு பருவத்தில் ரூ.20 ஆயிரம் அரசு ஊக்கத்தொகை வழங்குவது போல், தமிழ்நாட்டிலும் வழங்க வேண்டும்.

எட்டயபுரம் பகுதியில் பட்டாசு ஆலை அமைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இதனால் அந்த பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும்,
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
