102-வது பிறந்தநாள்: கருணாநிதி சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் இன்று செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

கருணாநிதியின் 102-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சிலைக்கு முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து மலர்தூவி வணங்கினார்.

அவருடன் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், நிர்வாகிகள் உள்பட பலரும் கருணாநிதியின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி வசித்த கோபாலபுரம் வீட்டுக்கு சென்றார். வீட்டின் உள்ளே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர்தூவி வணங்கினார்.

தொடர்ந்து கலைவாணர் அரங்கில் நடக்கும் செம்மொழி விழாவில் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

