முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரை வந்தார்; நாளை நடக்கும் திமுக பொதுக்குழுவில் பங்கேற்கிறார்

ஆளுங்கட்சியான தி.மு.க. மதுரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை நடத்த இருக்கிறது. தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடக்கிறது.
பொதுக்குழு கூட்டத்தில், 6 ஆயிரத்து 500 பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்க இருக்கின்றனர்.

2026 சட்டசபை தேர்தலை முன்னிறுத்தி நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது.
தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.45 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை புறப்பட்டு மதியம் 1.05 மணிக்கு மதுரை வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் பெரியசாமி, நேரு, தங்கம் தென்னரசு, மூர்த்தி, சாத்துார் ராமச்சந்திரன், தியாகராஜன், எம்.பி., டி.ஆர்., பாலு, மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் சித்ரா ஆகியோரும் வரவேற்றனர்.தொண்டர்கள் அளித்த வேஷ்டி, சால்வையை மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
இன்று மாலை முதல்-அமைச்சர் பங்கேற்கும் ரோடு ஷோ நிகழ்ச்சி நடக்கிறது. அவனியாபுரத்தில் இருந்து ஆரப்பாளையம் திருமலை நாயக்கர் சிலை வரை 22 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ நடைபெற இருக்கிறது. முடிவில், முன்னாள் மேயர் முத்து சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.


