ராமதாஸ் வழிகாட்டி, பாமக தலைவர் நான்; நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி பேச்சு

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவருடைய மகனும் கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

இந்த நிலையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் நேற்று முன்தினம் பேட்டியளித்தார்.
அப்போது அவர் அன்புமணிக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.

இதனிடையே கட்சி தலைவரான அன்புமணி, சென்னை சோழிங்கநல்லூரில் பா.ம.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நேற்று தொடங்கினார்.
இரண்டாவது நாளாக இன்று நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை நடத்தினார். அப்போது அன்புமணி பேசியதாவது:

விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு நாம் வேலையை செய்ய வேண்டும். தூசியை தட்டுவது போல விமர்சனங்களை தட்டுங்கள். பொறுப்பை பகிர்ந்து கொள்ளுங்கள்.
எல்லாவற்றையும் நீங்களே செய்ய வேண்டும் என்று கிடையாது. கட்சி யார் சொத்தும் கிடையாது. ராமதாஸ் வழிகாட்டி, பாமக தலைவர் நான். ராமதாஸ் வழியை பின்பற்றி வெற்றி பெறுவோம்.

ராமதாஸ் தொலைநோக்கு சிந்தனை கொண்டவர். தேர்தலுக்கு வியூகம் வகுத்துள்ளோம். எந்த குழப்பமும் வேண்டாம். கட்சி யார் சொத்தும் கிடையாது. நிர்வாகிகளை யாராலும் மாற்ற முடியாது”
இவ்வாறு அன்புமணி பேசினார்.
