• June 6, 2025

பா.ம.க. தலைவராக நானே செயல்படுவேன்- ராமதாஸ் அதிரடி அறிவிப்பு ; அன்புமணி ஆதரவாளர்கள் போராட்டம்

 பா.ம.க. தலைவராக நானே செயல்படுவேன்- ராமதாஸ் அதிரடி அறிவிப்பு ; அன்புமணி ஆதரவாளர்கள் போராட்டம்

பா.ம.க.வின் தலைவராக இனி நானே செயல்படுவேன் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்து உள்ளார். அன்புமணி செயல் தலைவராக நியமிக்கப்படுவதாக ராமதாஸ் தெரிவித்து இருக்கிறார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இருக்கும்  அன்புமணி ராமதாஸ் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் பா.ம.க.வின் தலைவராக இனி நானே செயல்படுவேன் என்றும் அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக நியமிக்கப்படுவதாகவும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ் கூறியதாவது:-

பா.ம.க.வின் நிறுவனர் மற்றும் தலைவராக இனி நானே செயல்படுவேன். நான் சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ சென்றதில்லை. பதவி பெறும் ஆசை எனக்கு இல்லை. 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்துள்ளேன்.

கூட்டணி உள்ளிட்ட விஷயங்களை கட்சியின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி முடிவெடுப்போம். பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்படுவார். பா.ம.க. தலைவராக நான் பொறுப்பேற்றதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அந்த காரணத்தை சொல்ல முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

சில மாதங்களுக்கு முன்பு, விழுப்புரத்தில் நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழுவில் ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை போர் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது அன்புமணி ராமதாஸை தலைவர் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளது பா.ம.க. தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அன்புமணி ராமதாஸை தலைவர் பதவியிலிருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டிவனத்தில் அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாஸை மீண்டும் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *