திருச்செந்தூர் ரெயில்நிலையத்தில் `எஸ்கலேட்டர்’ வசதி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உலகப் பிரசித்தி பெற்ற ஆன்மிக ஸ்தலங்களில் ஒன்றாக உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இருப்பினும் திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்தது. இதனால் அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். குறிப்பாக முதல் நடைமேடையில் இருந்து 2-வது நடைமேடைக்கு செல்வதற்கு உயர்மட்ட நடைபாலம் இல்லாமல் இருந்தது,.
பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் 2-வது பிளாட்பாரத்தில் இருந்து புறப்படுகிறது. இந்த ரெயிலுக்கு செல்வதற்கு முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். மற்ற பயணிகளில் பெரும்பாலானோர் முதல் நடைமேடையில் இருந்து தண்டவாளத்தில் குதித்து சென்று ஆபத்தான முறையில் ரெயில் ஏறி வந்தனர்.
எனவே, ‘லிப்ட்’ மற்றும் ‘எஸ்கலேட்டர்’ வசதி செய்துதர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து தற்போது ரெயில்நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
முதல் நடைமேடையில் இருந்து 2-வது நடைமேடைக்கு செல்வதற்கு நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு `எஸ்கலேட்டர்’ ‘வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வசதி தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால் சுற்றுலாபயணிகள், பக்தர்கள், முதியோர், மாற்றுதிறனாளிகள் உள்ளிட்டோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
.
