எட்டயபுரம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பக்தர்கள் பலி

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் செல்வராஜ் (38), பழனிச்சாமி மகன் விஜயகுமார் (38), காளிமுத்து மகன் விக்னேஷ் (31), பழனி அருகே ஆண்டிநாயக்கன்பட்டி காளிமுத்து மகன் மகேஷ்குமார் (35), ரத்தினசாமி மகன் ராஜ்குமார் (35) ஆகிய 5 பேர் 2 நாட்களுக்கு முன்பு அறுபடை கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதற்காக காரில் புறப்பட்டனர்.
நேற்று காலை சுவாமி மலைக்கு சென்ற அவர்கள், அங்கு தரிசனம் முடித்துவிட்டு திருச்செந்தூருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். காரை செல்வராஜ் ஓட்டினார்.
இன்று அதிகாலை 1 மணிக்கு மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் மாசார்பட்டி அருகே வந்தபோது, சிறுநீர் கழிப்பதற்காக காரை சாலையோரம் நிறுத்தினர். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் கார் தூக்கி வீசப்பட்டு சாலையோர பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் செல்வராஜ், விஜயகுமார், விக்னேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த மகேஷ் குமார், ராஜ்குமார் ஆகியோர் சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து மாசார்பட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துமணி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
