டிசம்பர் 21 சர்வதேச தியான தினம்

இந்தியா உலகிற்கு வழங்கிய கொடைகளுள் முக்கியமானவை யோகாவும், தியானமும் என்றால் மிகையல்ல.
ஐ.நா. சபை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் யோகாவை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டதைப் போல் 2024 டிசம்பர் 21 முதல் சர்வதேச தியான நாளாக ஐ.நா. சபை ஏற்றுக் கொண்டுள்ளது.
உலக அரங்கிற்கு யோகாவையும் தியானத்தையும் கொண்டு சென்ற பெருமை நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை சேரும் என்பதில் ஐயமில்லை.
*தியானம் என்பது உடலையும் மனதையும் அசைவற்று வெறுமனே வைத்திருப்பதாகும். பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் தான் அமர்ந்து தியானம் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. உடல் வசதிக்கேற்ப எந்த நிலையிலும்
இதை செய்யலாம். எந்த முத்திரையும் வேண்டாம், எந்த மந்திரமும் ஜெபிக்க வேண்டாம். எந்த கடவுள் பெயரும் உச்சரிக்க வேண்டாம்..கண்களை மூடி வெறுமனே அமர்ந்திருந்தால் போதுமானது. உலகிலேயே கடினமானது இதுதான்.
அரபிக் கடல் அலை போல் மனதில் என்ன அலைகள் தோன்றிக் கொண்டே இருக்கும். இந்த எண்ண அலைகள் நிற்க பல நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் கூட ஆகலாம். இதற்குப் பொறுமையும், நிதானமும் வேண்டும்.
கடலில் தோன்றும் இரண்டு அலைக்கற்றைகளுக்கு நடுவில் நீந்துவது போல் இருக்க வேண்டும். அலைகளைக் கண்டு அஞ்சக் கூடாது. கடல் அலை சறுக்கு விளையாட்டு மாதிரி தான் தியானம். தியானம் செய்யும் முறை: தியானத்தில் மனதையும் உடலையும் சமநிலைப்படுத்த வேண்டும். தனியே காற்றோட்டமான அறை அல்லது வீட்டு மாடியில் அல்லது தோட்டத்தில் செய்யலாம்.
கடற்கரை ஓரம் வசிப்பவர்கள் தியானத்தை கடற்கரையிலும், மலை பிரதேசத்தை ஒட்டி வாழ்பவர்கள் மலை உச்சியிலும் செய்யலாம். காலை வேளை தியானத்திற்கு ஏற்றது. தரையில் ஏதோ ஒரு விரிப்பின் மீது அமர்ந்து செய்யலாம். இந்த அவசர யுகத்தில் பேருந்து, ரெயில்,விமான பயணம் போன்றவற்றிலும் செய்யலாம். கால நேர வரையறை கிடையாது படுத்துக்கொண்டே தியானத்திலேயே இரவு உறக்கத்தை இணைத்துக் கொள்ளலாம். இதற்கு எந்த விதிமுறைகளும் இல்லை. தியானத்தின் பயன்கள் மனம் ஒருநிலைப்படும், வாழ்வில் குழப்பமற்ற தெளிவான நிலை ஏற்படும். வாழ்க்கையில் அச்சமற்ற சுதந்திர உணர்வு உண்டாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். எந்த விதமான அக,ப்புற நோய்கள் ஏற்படாது. மனித மாண்புகள் மேலோங்கும்.
ஆதி காலத்தில் முனிவர்களும், ரிஷிகளும் பல ஆண்டுகளாக காடுகளில் தியானம் செய்து வந்தனர். எடுத்துக்காட்டாக அர்த்தமச்சிந்திரர் என்ற முனிவர் காட்டில் பல ஆண்டுகள் குறிப்பிட்ட ஆசன முறையில் அமர்ந்து தியானம் செய்து வந்ததாக கூறப்படுவது உண்டு. அவர் அமர்ந்து தியானம் செய்த ஆசனப் பெயராலேயே அந்த ஆசனம் தற்பொழுது அர்த்தமச்சேந்திர ஆசனம் என்று அழைக்கப்படுகிறது என்பதை நாம் அறிவோம்.
தியானம் பற்றி அறிஞர்கள் பலர் பலவாறு கூறினாலும் கருப்பொருள் ஒன்றுதான். தத்துவ பேராசான் ஓஷோவின் தியான முறையே உலகம் முழுவதிலும் பின்பற்றப்படுகிறது. வாழ்க்கையில் சில நிமிடங்கள் தியானத்திற்கு ஒதுக்கி வருங்காலத்தை சஞ்சலனமின்றி மன அமைதியுடன் கொண்டு செல்வோமாக!
ரெ. சுப்பா ராஜூ, மாநில அரசு விருது பெற்ற ஆசிரியர். கோவில்பட்டி.
