`எங்கள் மகன் சாவில் நீதி வாங்கி கொடுங்கள்’:அமைச்சர் கீதாஜீவனிடம், கொலை செய்யப்பட்ட கோவில்பட்டி சிறுவனின் பெற்றோர் கதறல்

கோவில்பட்டி காந்திநகர் முத்துராமலிங்க தெருவை சேர்ந்த கார்த்திக் முருகன்-பாலசுந்தரி தம்பதியரின் இளைய மகன் கருப்பசாமி (வயது 10), 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
உடல்நல பாதிப்பால் பள்ளிக்கு செல்லாமல் விடுமுறையில் வீட்டில் இருந்த கருப்பசாமி கடந்த 9-ம் தேதி காலை சுமார் 10 மணிக்கு மாயமானான்.
இதுகுறித்து பாலசுந்தரி அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து சிறுவனை தேடினர். மறுநாள் அதிகாலை சிறுவன் கருப்பசாமி அருகே உள்ள மாடியில் இறந்து கிடந்தான். மேலும் சிறுவன் அணிந்திருந்த 12 கிராம் தங்கச் சங்கிலியை காணவில்லை.
சிறுவனின் மர்மச் சாவு குறித்து போலீசார் 12 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில்,அதே பகுதி சேர்ந்த ஆட்டோ டிரைவர் கருப்பசாமியை (33) கைது செய்தனர்.
இந்நிலையில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன். சிறுவன் கருப்பசாமி வீட்டுக்கு சென்றார்.
.அங்கு சிறுவனின் தந்தை கார்த்திக் முருகன், தாய் பாலசுந்தரி, பாட்டி கோட்டைத்தாய் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது கருப்பசாமியின் பெற்றோர் கதறி அழுதபடி கூறுகையில், “எங்களது மகன் இறந்ததற்கு நீதி வாங்கி கொடுங்கள்/ எனது மகனை எப்படி வீட்டில் இருந்து அழைத்துச் சென்றார். எங்கு வைத்திருந்தார். எப்படி அருகே உள்ள வீட்டின் மாடியில் கொண்டு வந்து போட்டார் என்பது பற்றிய விவரங்கள் எங்களுக்கு தெரிய வேண்டும், பச்சைப்பிள்ளையை கொலை செய்துவிட்டனர். பட்டப்பகலில் வீடு புகுந்து எங்கள் பிள்ளை தூக்கிச் சென்றுள்ளனர். நாங்கள் வயதானவர்கள் எப்படி இங்கு வசிக்க முடியும். எங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?, என்றனர்.
அதற்கு அமைச்சர் கீதா ஜீவன், காவல்துறையினர் முறையாக விசாரிப்பார்கள். கண்டிப்பாக நீதி கிடைக்கும். சம்பந்தப்பட்டவருக்கு தண்டனை உறுதியாக கிடைக்கும், என்று உறுதி அளித்தார்.,என்றார்.பின்னர் திமுக சார்பில் நிதி உதவி வழங்கினார்.
அப்போது திமுக நகர செயலாளர் கருணாநிதி, ஒன்றிய திமுக செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், மாவட்ட பிரதிநிதி மாரிச்சாமி மற்றும் கட்சியினர், உறவினர்கள் உடனிருந்தனர்.
