ஆன்மிக கேள்வி-பதில்கள்
கேள்வி: முகம் பார்க்கும் கண்ணாடியை வீட்டு வாசலில் வைப்பதன் நோக்கம் என்ன?
பதில்:-மங்கல பொருட்களில் கண்ணாடியும் ஒன்று. அதனால், மங்களகரமாக கண்ணாடியை வைப்பர். சிலர் கண்ணாடியை திருஷ்டிதோஷம் நீங்கவும் வாசலில் வைக்கிறார்கள்.
கேள்வி: வாசலில் சிலர் கடவுளின் உருவத்தையே கோலமாக இட்டு வருகின்றனர். இது சரியான முறையா?
பதில்:கோலம் என்றால் “அழகு’. இதனை வடமொழியில் “ரங்கவல்லி’ என்பர். ரங்கம் என்றால் அரங்கம், அதாவது மண்டபம், சபை என்று வைத்துக் கொள்ளலாம். இதன் தரைப்பகுதியில் அழகுக்காக கொடிகள் போன்று வரையப்படுவது கோலமாகும்.
“வல்லீ’ என்றால் கொடி. கொடிகளைப் போன்ற கோடுகளாலும், புள்ளிகளாலும் அழகாகப் போடப்பட வேண்டியவையே கோலங்கள். தெய்வங்களின் உருவங்கள் வீட்டு வாசலில் கோலமாகப் போடுவது, பிறகு அதன் மீது கால் பட நடப்பது இவற்றையெல்லாம் யோசிக்கவே கஷ்டமாகவே உள்ளது. எனவே இதற்கு அழகான புள்ளி கோலங்கள், சிக்குக் கோலங்கள் போன்றவற்றின் மூலம் தங்களது கைவண்ணத்தை திறம்பட வெளிப்படுத்தலாம்.
கேள்வி: பிறந்த குழந்தையின் ஜாதகத்தை எந்த வயதில் கணிக்க வேண்டும்?
பதில்: ஒரு வயது முடிந்த பிறகு கணிக்க வேண்டும். 12 வயது வரை பலன் கணிக்கக் கூடாது. பலரும் பலவிதமாகப் பலன் கூறுகிற இக்கால சூழ்நிலையில் சிறுவயதிலேயே குழந்தைகள் குழப்பமான மனநிலைக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்