நாலாட்டின்புதூர் பகுதியில் கனிமொழி வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூர் பகுதியில் நேற்று திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார்.
வழிநெடுக கூடி நின்ற மக்கள் மத்தியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். பிரசசாரத்தில் பேசிய கனிமொழி கூறியதாவது:-
தமிழ்நாட்டில் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள், கலைஞர் மகளிர் உரிமை தொகை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். சில பேருக்கு வரவில்லை என்றால், நிச்சயம் தேர்தல் முடிந்த பிறகு ஒன்றியத்தில் நமது ஆட்சி, இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த உடனே தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதி எல்லாம் வந்துவிடும். நம்முடைய வரி பணத்தையெல்லாம் மோடி வங்கி கொண்டு, அதனை திருப்பி கொடுக்கவில்லை. நிதி எல்லாம் உத்தரப்பிரதேசம், மற்ற மாநிலங்களுக்கு தருகிறார்கள், தமிழ்நாட்டிற்கு நிதி முறையாக வருவதில்லை.
தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கக்கூடிய ஆட்சி ஒன்றியத்தில் வந்தவுடன் நிச்சயமாக மீதி இருக்கக்கூடிய அத்தனை சகோதரிகளுக்கும் வரவேண்டிய மகளிர் உரிமை தொகை வந்து சேரும் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்.
ஒன்றியத்தில் நம்முடைய கூட்டணி ஆட்சி வந்தவுடன், முதலமைச்சர் வாக்குறுதி அளித்தது போல், சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும். அதேபோல பெட்ரோல் ரூ 75, டீசல் 65, சுங்கச்சாவடி மூடப்படும். விவசாய கடன் ரத்து செய்யப்படும், கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கனிமொழி பேசினார்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மதிமுக மாவட்ட கழக செயலாளர் ரமேஷ், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் முருகன், கோவில்பட்டி நகர செயலாளர் கருணாநிதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
