• May 9, 2024

தூத்துக்குடியில் கனிமொழி தேர்தல் பிரசாரம்; திறந்த ஜீப்பில் சென்று ஓட்டு வேட்டை

 தூத்துக்குடியில் கனிமொழி தேர்தல் பிரசாரம்; திறந்த ஜீப்பில் சென்று ஓட்டு வேட்டை

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் ‘போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி இன்று (24/03/2024) தூத்துக்குடி கலைஞர் அரங்கம் முன்பு உள்ள கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரத்தை தொடங்கினர்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கலைஞர் அரங்கம், மாரியம்மன் கோயில், டி. எம். சி.காலனி ஜங்ஷன், காசி நாடார் ஆயில் மில், ஆமெரிக்கன் ஆஸ்பத்திரி அருகில், உருண்டையம்மன் கோவில் அருகே, கருப்பட்டி சொசைட்டி, பூபால்ராயபுரம், திரேஸ்புரம் ஜங்ஷன், புது தெரு, மட்டக்கடை, 2ஆம் கேட் போஸ் திடல், தேரடி, பள்ளிவாசல்,பி. பி.எம்.டி. ஜங்ஷன், சுமங்கலி கல்யாண மண்டபம், பீங்கான் ஆபிஸ், பக்கில்புரம், கே. எஸ். பி. எஸ். தியேட்டர், சிதம்பர நகர், பிரையண்ட் நகர் 12வது தெரு, 3ஆம் மைல், பழைய பஸ்டாண்டு, அண்ணாநகர் ஆகிய இடங்களில் கனிமொழி பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கூறியதாவது :-

:தூத்துக்குடி என்பது எனக்கு இரண்டாவது தாய் வீடாக உணரக்கூடிய வகையில் உள்ளது. நாடும் நமது, நாற்பதும் நமது என்ற வகையில் நாம் பணியாற்ற வேண்டும். தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்துக் கொண்டு தமிழகத்துக்கு வர வேண்டிய நிதியையும், ஏன் வெள்ள நிவாரணம் கூட தராமல் வஞ்சித்துக் கொண்டிருக்கும் ஒன்றிய பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

 பிரதமர் மோடி தற்போது அடிக்கடி தமிழகத்துக்கு வருகிறார். வெள்ளம் பாதித்த நேரங்களில் வராத பிரதமர் தற்போது வருகிறார். வந்து திமுகவை அழித்து விடுவதாக பேசி வருகிறார். திமுகவை யாராலும் அழிக்க முடியாது, அழித்து விடுவேன் என சொன்னவர்கள் தான் காணாமல் போய் உள்ளனர்.

திமுக ஆட்சி மூலம் இந்த நாட்டுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறது. அதனால்தான் தற்போதைய இந்த தேர்தல் அறிக்கையில் கூட மகளிர் உரிமைத் தொகையை நாடு முழுவதும் விரிவு படுத்தப்படும் எனவும் அதுபோல் காலை உணவு திட்டத்தையும் நாடு முழுவதும் அமல் செய்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஒன்றிய பாஜக ஆட்சியில் பெட்ரோல் விலை டீசல் விலை மற்றும் கேஸ் விலையை ஏற்றி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நமது இந்தியா கூட்டணி அரசு வரும்போது பெட்ரோல் விலை ரூபாய் 75, டீசல் விலை ரூபாய் 65, அதுபோல் கேஸ் சிலிண்டர் விலை 500 ஆக அனைத்தும் குறைக்கப்படும்.  மக்களை விலைவாசியிலிருந்து காப்பாற்றும் அரசாக அந்த அரசு செயல்படும்.

மக்களுக்கு எந்தவித நிதி உதவியும் செய்யாமல் அதே போல ஒரு பைசா கூட வழங்காமல் தமிழ்நாட்டிலிருந்து வரி வசூல் பண்ணி அங்கே இருக்கக்கூடிய ஒன்றிய அரசுக்கு நாம் ஒரு ரூபாய் கொடுத்தால், அவர்கள் நமக்கு திருப்பி கொடுப்பது 26 பைசா, ஆனால்  உத்தரப் பிரதேசத்திலிருந்து  1  ரூபா வரி கொடுத்தால் 2 ரூபாய் 2 பைசா.  எந்த அளவுக்கு அவர்கள்  தமிழகத்தை, தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்களா என்பதை  நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அதே போல இவர்கள்  கொண்டு வந்த சட்டத்திற்கு டெல்லியில் ஆதரவு கொடுத்தது அதிமுக. அவர்கள் இப்போது  பிரிந்து நிற்கிறோம் என்றால் நம்பாதீர்கள் இரண்டு ஸ்டிக்கரும் மீண்டும் இணைந்து கொள்ளும். இங்கே இருக்கும் பெண்களின் உயர்கல்விக்காக புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் வழங்கி வருகிறோம். 

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் 13 பேர் சூட்டுக்கொல்லப்பட்டனர். இந்த ஆலையை மீண்டும் திறக்க வேண்டுமென்ற போது, முதலமைச்சர் மக்கள் பக்கம் நின்று ஆலையை மூட நடவடிக்கை எடுத்தார். 

 வரக்கூடிய இந்த தேர்தலிலே தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் இருந்தே பாஜக விரட்டி அடிக்கப்பட வேண்டும். இந்தியா கூட்டணி இங்கு ஆட்சி அமைக்க வேண்டும். 

நம்முடைய இளைஞர்கள் கல்விக்காக வாங்கி இருக்கக் கூடிய கடன் ரத்து செய்யப்படும். அதுமட்டுமில்லாமல் நீங்க வெளியூர் போகும்போது ஒவ்வோர் இடத்திலும் டோல்கேட்டில் நிறுத்தி காசு வாங்குறாங்க அந்த டோல்கேட்டில் வாங்கக்கூடிய காசு எல்லாம் நிறுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  உங்களுடைய பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் அளித்து மீண்டும் உங்களோடு பணியாற்றக் கூடிய வாய்ப்பை நீங்கள் எனக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு கனிமொழி பேசினார்.

அமைச்சர் பெ.கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ‘கூட்டணிக் கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *