கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை; கணக்கில் வராத பணம் பறிமுதல்

கோவில்பட்டி மின்வாரிய அலுவலகத்தில், மின் இணைப்பு பெயர் மாற்றம், புதிய இணைப்பு மற்றும் வணிகத்தில் இருந்து வீட்டு உபயோகமாக இணைப்பாக மாற்றுதல் உள்ளிட்டவைகளுக்கு பணம் பெறப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. பீட்டர் பால்துரை, ஆய்வாளர்கள் சுதா, அனிதா, உதவி ஆய்வாளர் தளவாய் மற்றும் போலீசார் இன்று பகல் 12.30 மணிக்கு கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
செயற்பொறியாளர் எஸ்.காளிமுத்து அறைக்கு சென்றனர். அங்கு நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.1,38,500 பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அங்கிருந்த கிராமப்பகுதி அலுவலகத்தில் நடத்திய சோதனையில் ரூ.6,800 சிக்கியது. மொத்தம் ரூ.1,45,300 கைப்பற்றப்பட்டது.

தொடர்ந்து உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அறைகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். பின்னர் செயற் பொறியாளர் காளிமுத்துவிடம் விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
செயற்பொறியாளர் காளிமுத்து திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் திண்டுக்கல்லில் மின்வாரிய உதவி செயற் பொறியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 6 மாதத்துக்கு முன்பு பதவி உயர்வு பெற்று கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற் பொறியாளராக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடதக்கது.
